கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி? - ஏ.எல்.சூர்யா; பக்.304; ரூ.300; பி பாசிட்டிவ் புரொடக்ஷன்ஸ், 36 ஏ, சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை-17.
பணம் சம்பாதிப்பதற்கு தொழில், வேலை மட்டும் இருந்தால் போதாது, மனமும் வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிப்பேன் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவரும் தனது ஆழ்மனதில் பதித்துக் கொண்டு செயல்பட்டால், நிச்சயம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் நூல். நம்பிக்கை எவ்வாறு மனிதனை மாற்றுகிறது என்பதை விளக்குகிறது. அந்த நம்பிக்கை நம்மை இயங்கச் செய்ய தேவையற்ற சிந்தனைகள், பேச்சுகள், செயல்களை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றும் இந்நூல் கூறுகிறது.
"நம்பிக்கை அளிப்பது, நம்பிக்கை ஊட்டுவது என்பது ஒரு சாதாரண செயல் அல்ல, அது ஒரு மனிதனின் மனோநிலையில் ஏற்படக் கூடிய மாபெரும் மாற்றம்' என்ற அடிப்படையில் வாசகர்கள் தங்களுடைய இலக்கை அடைய அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த இந்நூல் முயற்சிக்கிறது.
ஆழ்மனதில் நம்பிக்கைகளை விதைத்து அவற்றை வளர்த்துப் பயன்பெற தேவையான பயிற்சிகளையும் இந்நூல் அளிக்கிறது. முன்னேறத் துடிப்பவர்களுக்கு வழிகாட்டும் நூல்.