யாதுமாகி நின்றாள்
யாதுமாகி நின்றாள்- சுப்ர.பாலன்; பக்.160; ரூ.150; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; 044-2434 2810.
தினமணி, கல்கி, அமுதசுரபி, úஸடீஸ் ஸ்பெஷல் முதலிய தீபாவளி மலர்களில் வெளியான 18 பயணக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். "பால முருகன்' என்று மூலவரை வழிபட்டாலும் வள்ளி-தெய்வயானை சமேதராக - சுப்ரமண்யராகக் காட்சிதரும் இரத்தினகிரி முருகன் பற்றி கூறுகிறது ஒரு கட்டுரை.
அதில், மின்வாரியத்தில் பணியாற்றிய சச்சிதானந்தன் என்ற 27 வயது இளைஞன் ஒருவனை பால முருகன் வசப்படுத்திக் கொண்டது, பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஞானம் பெற்றது முதலிய தகவல்கள் உள்ளன.
ஆர்.எல்.ஹாரிஸன் எனும் ஆஸ்திரேலியப் பெண்மணி ஒருவர் பழநி ஆண்டவரின் பெருங்கருணையால் இந்துவான வரலாறு, பெரும்பாலும் பலரும் கேள்விப்படாதது. பெரும் கல்வியாளராகவும், கொழும்பு நகரில் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந்த இலங்கைத் தமிழரான "ஸர்' பொன்னம்பலம்
ராமநாதனைக் குருவாக ஏற்றுக்கொண்டார் இந்தப் பெண்மணி. அதுமட்டுமல்ல, மனைவியை இழந்தவரான அவரையே மணந்தும் கொண்டார். அன்றிலிருந்து "லீலாவதி ராமநாதன்' என்று தம் பெயரை மாற்றிக்கொண்டாராம். கணவர் மறைந்த பிறகு அவருடைய நினைவாகக் கொடைக்கானல்
ஏரிக்கு 3 கி.மீ. தொலைவிலுள்ள "குறிஞ்சி ஆண்டவர்' கோயிலை உருவாக்கினார் லீலாவதி ராமநாதன் எனப்படும் "லேடி ராமநாதன்'. பழநி மலையை நோக்கியபடி இந்தக் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அமைந்திருப்பதுதான் அதன் தனிச்சிறப்பு என்பதை "பழநியை நோக்கும் குறிஞ்சி ஆண்டவர்' கட்டுரை எடுத்துரைக்கிறது.
உஜ்ஜைனி மகாகாளி பற்றிய அரிய தகவல்கள், ஆயிரக்கணக்கில் நாகர் திருமேனிகள் உள்ள "ஸ்ரீவிதுர அஸ்வத்த நாராயண ஸ்வாமி கோயிலில்' துவாபர யுகத்தில் மைத்ரேய மகரிஷி உருவாக்கி வளர்த்த அரசமரமும் அதை, 5000 ஆண்டுகளுக்கு முன்பே அது வணங்கப்பட்டதையும் எடுத்துரைக்கிறது "ஆயிரக்கணக்கில் நாகர் திருமேனிகள்' எனும் கட்டுரை.
ஸ்ரீபுரம் பொற்கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீமகாலக்ஷ்மி, குன்றில் குடிகொண்டிருக்கும் நரசிம்மரான சிங்கபெருமாள், பரமேஸ்வரனை மணந்து கொள்ள ஆர்வம் காட்டிய "கருப்பு வண்டை விரட்டிய அரசகுமாரி' பற்றிய ஸ்ரீசைலம் கோயில் கதை என அற்புதமான ஆன்மிகத் தகவல்களை அள்ளித்தருகிறது இந்நூல்.