கானல் நீர் காட்சிகள்-(தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகள்): பக். 160; ரூ.120; வானதி பதிப்பகம், சென்னை - 17; )044-2434 2810
தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டி (2018) -இல் பரிசு பெற்ற கதைகளின் தொகுப்பு இந்நூல்.
தொழில் நுட்பம் அசுர வேகமாக வளர்ந்துள்ள இன்றையச் சூழ்நிலையில் வாட்ஸ் அப் மூலம் இருவரிடையே நடக்கும் பதிவுகளில் பெண்கள் எப்படி எளிதில் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை உரையாடல்களின் மூலம் நம் கண் முன்னே காட்டுகிறது முதல் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்ட கதை.
மாதவிலக்கின்போது பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்கள் மூலம் புற்றுநோய் உருவாக வாய்ப்புண்டு என்று மகள் தாயிடம் சொல்வது போல அமைக்கப்பட்ட கதை - இளைய தலைமுறையினரின் பெருமையைச் சொல்கிறது. அதைத் தாய் ஏற்றுக் கொள்வது அவரது பெருமையை உயர்த்துகிறது. மனம் விட்டுப் பேசினால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வுண்டு என்பதை வலியுறுத்தும் கதை.
நீலத் திமிங்கல விளையாட்டில் மனம் லயித்து ஈடுபட்டுத் தற்கொலை வரை செல்லும் குழந்தைகளைத் தாத்தா, பாட்டி அரவணைக்கும் கதை, இந்தியாவில் உள்ள கூட்டுக் குடும்ப முறையின் பெருமையை நினைவூட்டுவதாக உள்ளது. வாழ்க்கையில் பணத்தைத் தேடி அலைபவர்களின் குழந்தைகள், உறவுகளைத் தொலைத்துவிட்டு நிற்கும்போது படும் அவஸ்தைகள், நகரங்களில் வாடகைக்கு இருப்பவர்களின் வீடுகளில் இருப்பவர்கள் உயிரிழந்தால் படும் அவஸ்தைகள், முதுமைக் காலத்தில் பெற்றோர்களைப் புறக்கணிக்கும் ஈரமில்லாத மனதுடைய இளைஞர்கள், ஆண் என்ற ஆதிக்க எண்ணத்தில் மனைவியுடன் தகராறுகளில் ஈடுபடுபவர்கள், குழந்தை பிறக்காததைக் காரணம் காட்டி விவாகரத்துக் கோருபவர்கள் என இன்றைய யதார்த்த வாழ்க்கையை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள். சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டுவதுடன், நமது பாரம்பரியப் பெருமைகளை அறியும் வகையில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு.