ஏழு ராஜாக்களின் தேசம் - அபிநயா ஸ்ரீகாந்த்; பக்.248; ரூ.275; யாவரும் பப்ளிஷர்ஸ், 214, மூன்றாவது பிரதான சாலை, புவனேஸ்வரி நகர், வேளச்சேரி, சென்னை-42.
தூத்துக்குடியைச் சேர்ந்த நூலாசிரியர், கணவரின் வேலை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் இரண்டு ஆண்டுகள் வாழும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அந்த அனுபவங்களின் அடிப்படையில், துபாய், ஷார்ஜா, அபுதாபி, அஜ்மான், உம் அல் குவைன், புஜைரா, ராஸ் அல் கைமா என்ற ஏழு ஐக்கிய அரபு நாடுகளைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய நூலை எழுதியிருக்கிறார்.
ஐக்கிய அரபு நாடுகளில் யார் வேண்டுமானாலும் தொழில் வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம்; ஆனால் அமீரகக் குடியுரிமை பெற்றவர்களைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஹுக்கா புகைப்பது அரபு சமூகத்தினரின் பாரம்பரிய பழக்கம். ஆனால் புகையிலை, நிகோடின் பாதிப்புகள் இல்லாத ஹுக்காகளைப் புகைப்பதற்கான ஷிஷா பார்கள் அங்கு உள்ளன.
பூமியிலிருந்து 50 அடி உயரத்தில் 1 மணி நேரம் வானில் பறந்தவாறே செல்லும் பறக்கும் உணவுக்கூடங்கள் அங்கு உள்ளன. குதிரை அருங்காட்சியகம், காபி மியூசியம், அல் சிந்தகா பகுகியில் உள்ள ஒட்டக அருங்காட்சியகம் என அங்கு நிறைய அருங்காட்சியகங்கள் உள்ளன. லிவாவில் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்ளக் கூடிய பேரீச்சை திருவிழா நடக்கிறது.
உலகின் ஏற்றுமதி - இறக்குமதியில் 25% துபாய் நாட்டில் நடக்கிறது. பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைப் பாதுகாத்து ஏற்றுமதி செய்கிறார்கள்.
இவ்வாறு ஐக்கிய அரபு நாடுகளைப் பற்றிய பல்வேறுவிதமான தகவல்களைத் தரும் களஞ்சியம் இந்நூல்.