காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேசங்கள் - ஸ்ரீதர் - சாமா; பக்.100; ரூ.90; விருட்சம், சென்னை-33; 044-2471 0610.
காஞ்சி மகா பெரியவர் ஒரு நடமாடும் தெய்வம். அவர் திருவாக்கிலிருந்து வெளிவந்த உபதேச மொழிகள் ஏராளம் என்றாலும், அவற்றிலிருந்து முதன்மையான சில உபதேசங்களையும் நிகழ்வுகளையும் முத்துக் குளிப்பதைப் போல குளித்துத் தேடித் தொகுத்துத் தந்திருக்கிறார் ஸ்ரீதர் சாமா.
நம் பாரத தேசத்தில் இளம் வயது முதலே நம் தேசத்துக்குரிய ஒழுக்கம், பண்பாடு, இறை வணக்கம், ஆத்ம தியானம் என்கிற நல்ல பழக்கம் இல்லாமலிருந்து வருவது குறித்து எடுத்துரைக்கும் மகா பெரியவர், ""நெருப்பை வாயாலே ஊதப்படாது என்பதற்குக் கூட சாஸ்திரம் சொல்கிற காரணம், வாயால் ஊதுவதால் எச்சில் காற்று அக்கினி பகவான் மேலே பட்டு அபசாரமாகிவிடும் என்பதால்தான்'' என்கிறார்.
மேலும், "சிவ' என்கிற சொல்லில் (ஆண்-பெண் பெயர்களில் உள்ள அக்ஷரங்கள்) உள்ள தத்துவத்தை உணர்த்தும் இடம் அற்புதம்.
""கல்வியின் முதல் பிரயோஜனமான விநயம் ஏற்பட வேண்டும். அடக்கம் இல்லாத படிப்பு படிப்பே ஆகாது. தன்னைத்தானே அடக்கிக் கொள்ளும்படியான நல்ல குணம் முதலில் வரவேண்டும். கல்வியின் பயன் மெய்யான பொருளாகிய ஆண்டவனைத் தெரிந்து கொள்வதுதான். ஆனால் இந்தக் காலத்தில் படிக்கிறவர்களில் அநேகருக்குத் தெய்வ பக்தியே இருப்பதில்லை. முன்பு நம் மாணவர்களிடம் குருபக்தி இருந்தது. தற்போது அடியோடு போய்விட்டது'' என்று கூறுவதுடன், ""குருகுலக் கல்வியும், குருபக்தியும்தான் இன்றைய மாணவர்களின் கோளாறைத் தீர்க்கின்ற பெரிய அருமருந்து'' என்கிறார்.
""தரமான வாழ்க்கை வாழ்வது என்பது மனநிறைவோடு இருப்பதுதான். பூரண சந்தோஷம் பழைய தர்மங்களை நாம் பூரணமாக அநுஷ்டிக்குமாறு நம்மைச் செய்து கொள்ளும் போதுதான் உண்டாகும். மேலும் மேலும் பணம் தருகிற தொழில், மேலும் மேலும் வியாதி தருகிற காரியங்களை விட்டுவிட்டு, நிம்மதியோடு நிறைவோடு அடங்கி வாழ்வதற்கு மனஸôர முயற்சி செய்ய வேண்டும்'' -இப்படி நூலில் கோடிட்டு வைத்துப் படிக்க வேண்டிய வைர வரிகள் ஏராளம் உள்ளன. திருமணம் மற்றும் பிறந்த நாளில் பரிசளிக்க வேண்டிய அற்புதமான அருள்மொழி நூல் இது.