யுத்தத்தின் முதலாம் அதிகாரம் - தேவகாந்தன்; பக்.232; ரூ.230; வடலி வெளியீடு, பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் ரோடு, சென்னை-5.
இன்று நடப்பவை நேற்றின் தொடர்ச்சியாகத்தான் இருக்கின்றன. ஈழத்தில் மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதும் அதற்கு விதிவிலக்கல்ல.
கி.பி.1800-க்கு முன்பு யாழ்ப்பாணத்தை டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில் டச்சுப் படையினர் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், அந்தப் படைவீரர்களை தமிழ் மக்கள் கொன்றழித்ததும் நிகழ்ந்திருக்கிறது.
தமிழ் மக்களுக்கு இடையில் இருந்த சாதி மோதல்கள் பல்வேறு வகைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன. அது தாழ்ந்த சாதிப் பிரிவினர் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது. இந்த சாதி அடக்குமுறை எதிர்ப்பு போராட்டங்களின்போது மக்கள் ஆயுதமேந்தியிருக்கின்றனர்.
1960 -க்குப் பின் நடந்த சாதிப் போராட்டங்களில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. உயர் சாதியினரின் பலப் பிரயோகக் கொடுமைகளிலிருந்து விடுபட தாழ்த்தப்பட்ட மக்கள் மல்யுத்தம் பயின்றனர். சமூகத்தின் வன்முறையென்பது ஆயுதங்களின் வளர்ச்சி வரலாறாய் விரிந்திருக்
கிறது. ஆயுதங்கள் ஒரு சமூகத்தின் பண்பாட்டுக் கூறாய் ஆனது.
1975 -க்குப் பிறகு அதுவே சிங்கள ராணுவத்துக்கு எதிரான போராட்டத்திற்கு அடியுரமாக அமைந்தது. இந்த வரலாற்றுப் பின்புலத்தில் கி.பி.1800- இலிருந்து,1980 வரை ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்கள், உணர்வுப்பூர்வமாகவும் சிறந்த கலைத்தன்மையுடனும் இந்த நாவலில் பதிவாகியிருக்கின்றன.