"அருந்தவப்பன்றி' சுப்பிரமணிய பாரதி - பாரதி கிருஷ்ணகுமார்; பக்.174; ரூ.140; சப்னா புக் ஹவுஸ், கோவை-2; 0422 - 462 9999.
நூலின் தலைப்பு ஒருவிதமான அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். என்றாலும் நூலைப் படிக்கத் தொடங்கியவுடன், நூலாசிரியர் சொல்லும் விஷயங்களில் அமிழ்ந்து பாரதியாரைப் பற்றி நம் மனதில் ஏற்கெனவே இருந்த சிறப்பான மதிப்பீடுகள் இன்னும் அதிகமாக வலுப்பெற்றுவிடுகின்றன. "இப்படி ஒரு மகாகவியா?' என்று யோசிக்க வைத்துவிடுகிறது.
தமிழ்க் கவிதையை மக்கள் மொழியில் மாற்றிய பெருமை பாரதியாருக்கு உண்டு. அவர் நிறைய கட்டுரைகள் எழுதியிருந்தாலும் கவிஞராகவே நம் எல்லாருடைய மனதிலும் நிற்கிறார். ஆனால் பாரதியார் கவிதைகள் எழுதாமற் போன காலமும் உண்டு. கவிதை அவரை விட்டுவிலகியிருந்த அந்தக் காலத்தை
"அருந்தவப்பன்றி'யின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பாரதியார் விளக்கியிருக்கிறார். நூலின் தலைப்புக்கு இதுவே காரணம்.
1909 - ஆம் ஆண்டு "இந்தியா' பத்திரிகையில் வெளிவந்த "கவிதாதேவி - அருள் வேண்டல்' கவிதையில் இந்த அருந்தவப்பன்றி இடம் பெற்றிருக்கிறது.
பாரதியார் காசிக்குப் போன 1898 ஆண்டுக்கும் 1904 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஒரு கவிதையைக் கூட படைக்கவில்லை.
1918 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாய்மண்ணில் வாழ வேண்டும் என்பதற்காக பாண்டிச்சேரியில் வாழ்ந்து வந்த பாரதியார், பிரிட்டிஷார் ஆட்சிப் பகுதிக்கு துணிச்சலுடன் வரும்போது கைது செய்யப்படுகிறார். இருபத்து நான்கு நாட்கள் சிறையில் அடைக்கப்படுகிறார். அதன் பிறகு, அவர் கவிதை எழுதினால் அதை இரண்டு உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்றே பிரசுரிக்க வேண்டும் , கடையத்தில் அவர் வாழ வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படுகிறார். கடையத்துக்குச் சென்று வறுமையுடன் போராடிய பாரதியாருக்குக் கவிதை எழுத முடியவில்லை. 1919 - ஆம் ஆண்டு மே மாதம் கவிதை எழுதிய அவர், அந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் கவிதை எழுத முடிகிறது. அந்தக் கவிதையும் பொருளுதவி பெறும் நோக்கத்துடன் எழுதப்பட்ட கவிதை.
ஒரு படைப்பாளியின் வாழ்க்கைச் சூழல் அவனைப் படைப்பிலிருந்து எவ்வாறு விலக்கி வைக்கிறது என்பதற்கான உதாரணங்களாக இவை திகழ்கின்றன. பாரதியாரின் படைப்புகளில் காணப்படும் சுயசரிதைத் தன்மை வாய்ந்த படைப்புகளைப் பற்றிய விரிவான அறிமுகமும், அவற்றில் சில பின்னிணைப்பாகவும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
பாரதியாரின் இளமைக்கால வாழ்க்கை, எட்டயபுரம் ராஜாவுடன் அவருக்கிருந்த நட்பும், முரண்பாடுகளும், பாரதியாரின் தந்தை சின்னச்சாமி "எட்டயபுரம் காட்டன் ஜின்னிங் ஆலை'யை நிறுவ முயற்சித்தது, பிரிட்டிஷார் அதைத் தடுத்தது என பலரும் அறியாத செய்திகளை இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
குறுந்தொகைப் பாடல்கள் (1-25) - குழ.கதிரேசன்; பக்.136; ரூ.80; ஐந்திணைப் பதிப்பம், சென்னை-40; 044-2618 3968.
குழந்தைகள் மனத்தைக் குளிர்வித்துப் பல குழந்தை இலக்கியங்களைப் படைத்த "குழந்தைக் கவிஞர்' குழ.கதிரேசன், இப்போது இலக்கிய இன்பம் நல்கும் "நல்ல குறுந்தொகை' எனப் போற்றப்படும்