இராமானுஜர் - எளியோரின் ஆச்சாரியர் - கன்யூட்ராஜ்; பக். 211; ரூ.175; தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை- 98: ) 044 -2625 1968.
ஸ்ரீ ராமானுஜரை சமயவாதி என்பதைவிட, சீர்திருத்தவாதி என்று குறிப்பிடப்பட்டு ஆராயும் போக்கு தற்காலத்தில் அதிகரித்துள்ளது. முதன்மையாகவும் முற்றிலுமாகவும் அவர் சமயவாதியே. சீர்திருத்தம் அவர் தொண்டில் ஒரு பகுதியே. அவரது சமயநெறிச் சிந்தை மூலமே முதன்மையாக நினைவுகூரப்படுகிறார். சமயத்தைப் பிரித்து ராமானுஜரை அடைந்துவிட முடியாது என்பதை அவரது வாழ்வை ஊன்றிப் பார்ப்பவர்கள் அறிவர். இந்த நூலும் ஒருவகையில் அதனை உறுதிப்படுத்துகிறது.
சமயத் துறவிகள் என்றாலே சமூக வாழ்க்கையிலிருந்து வெளியேறி கண்காணாது மறைந்து வாழ்பவர்கள் என்பதில்லை. பற்றற்ற நிலையுடன் தாங்கள் வாழும் சமூகத்துக்குள்ளேயே வாழ்ந்து காட்டுபவர்கள். தங்கள் வாழ்நாளிலேயே அவர்கள் காலத்துக்கான சமூக மாற்றங்களைத் தொடர்ந்து நடத்திக் காட்டுபவர்கள். ஹிந்து நெறியின் நெடிய வரலாறு அதற்குச் சான்று.
"மிக வலுவாக வடிவமைத்துக் கொண்டிருந்த இந்த சாதீயக் கோட்டையை உடைப்பதற்கு இராமானுஜர் தன்னளவில் முயன்றார்...அந்தக் கற்கோட்டையை தாக்க முடியும், தாக்கப்பட வேண்டும் என்ற எடுத்துக்காட்டை அவர் முன்வைத்தார்' என்கிறார் நூலாசிரியர். மேலும், இதை வரலாற்றுப் புத்தகம் என்பதைவிட, உயர் மனிதர், மானுட நேயர் ஒருவரின் எடுத்துக்காட்டான வாழ்வின் விளக்கம் என்றும் குறிப்பிடுகிறார். அந்த அடிப்படையில் ராமானுஜர் வரலாற்றைத் தனது வழியில் கூறும் பேரவா கொண்டு, கதை வடிவில் அதனைக் கூறியிருக்கிறார்.