கர்மா தர்மா - க.மணி; பக்.64; ரூ.100 ; அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏ.கே.ஜி. நகர் முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை-641015.
அறிவியல் சார்ந்த நிறைய நூல்களை எழுதியிருக்கும் நூலாசிரியர், ஆன்மிகம் சார்ந்து இந்நூலை எழுதியுள்ளார். செய்வது அனைத்தும் கர்மம், அதன் பலனை நிச்சயிப்பது தர்மம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
புதுப்புது இயற்பியல், ஆகாயவியல் விதிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் தோறும் அவர்கள் ஈச்வரனின் இயக்க நியதிகளைத்தான் சிறிது புரிந்து கொள்கிறார்கள். விஞ்ஞானம் என்பதே ஈச்வரனை அறியும் அறிவே. விஞ்ஞானிகள் ஈச்வரனைத்தான் ஆராய்கிறார்கள்.
ஈச்வரனைப் புரிந்து கொள்வதற்காக கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், காஸ்மாலஜி போன்ற படிப்புகளை எல்லாம் படிக்க வேண்டியதில்லை. எல்லாம் அவரது ஆணைக்குள் நியதிகளாகப் பிழையின்றி நடக்கின்றன என்கிற ஒரு பொது உண்மையைப் புரிந்து கொண்டால் போதும் என நூலாசிரியர் அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள உறவை- தொடர்பை விளக்குகிறார்.
நாலு வயதில் பதிந்த மன உணர்வுகளின் அடிப்படையில்தான் 80 ஆவது வயது வாழ்க்கையும் அமைகிறது. இது அடிமனம் ஆகிறது. இதுவன்றி ஆழ்மனம் என்று ஒன்றிருக்கிறது. அதில் கடந்த பிறவிகளின் பயங்கள் பதிந்துள்ளன என்ற நூலாசிரியரின் கூற்று, அவருடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.