உறவைக் காக்க உயில் உயிரைக் காக்க உறுப்பு-சீனி.வரதராஜன்; பக்.136; ரூ.140; சந்தியா பதிப்பகம், சென்னை-83; 044 2489 6979.
முதுமையை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு மனிதனும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன. நம்முடைய உழைப்பின் மூலம் சம்பாதித்த செல்வத்தை அடுத்த தலைமுறை எவ்வித இடர்ப்பாடும் இன்றி அனுபவிக்க வேண்டும்; குடும்பத் தலைவனாக பொறுப்பேற்கும் எந்த வயதினரும் சொத்துக்களின் எதிர்கால அனுபவ உரிமையை முறைப்படி உயில் எழுதி வைப்பது நல்லது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். அதற்கு ஒரு சில உதாரணங்களையும் எடுத்துரைக்கிறார். உயிர் எழுதுதல், செட்டில்மெண்ட் பத்திரம் எழுதுதல், உயில் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை, தானப் பத்திரம் எழுதுதல் போன்றவற்றைப் பற்றி விளக்கம் அளிக்கும் உதவி கையேடாக இந்நூல் அமைந்துள்ளது.
குடும்ப உறவுகள் எதிர்காலத்தில் எந்த பிரச்னைக்கும் ஆளாமல் சொத்துக்களைப் பராமரிக்க, அனுபவிக்க உயில் எவ்வளவு முக்கியம் என்பதை இந்நூலை படிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும்.
அசையா சொத்துக்கள் மட்டுமல்ல, நம் உடலும் ஒரு வகையில் சொத்துக்கு நிகரானதுதான். அதை நம் இறப்புக்கு பிறகு பிறர் நலனுக்காக எப்படிப் பயன்படுத்தலாம் என்பதோடு, கண் தானம், உடல் தானம், உறுப்பு தானம் ஆகியவற்றைப் பற்றி மேலோட்டமாக தெரிந்த ஒவ்வொருவரும் அவற்றைப் பற்றி மிக தெளிவான அறிவை பெறுவதற்கும் இந்நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள் உதவும்.