கு.சின்னப்ப பாரதியின் மனித இயந்திரம் (சிறுகதைகள்) - கு.சின்னப் பாரதி; பக்.120; ரூ.100; கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், சென்னை-109;)044- 2638 5272.
"கும்பிட வேண்டிய தெய்வம்', "காவல்நிலையம்', " பிச்சைக்காரர்கள்' , "மனித யந்திரம்' உள்ளிட்ட 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
"கும்பிட வேண்டிய தெய்வம்' சிறுகதையில் கூலி வேலை செய்யும் வீரா இடுப்பு எலும்பு முறிந்து நடமாட முடியாமல் வீட்டில் இருக்கும் தன்தாயைச் சுத்தம் செய்வது உள்பட எல்லாவிதமான வேலைகளையும் செய்கிறான். அவனுடைய மனைவியும் முகச்
சுளிப்பின்றி மாமியாரைப் பார்த்துக் கொள்கிறாள். ஆனால் அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியரின் அம்மா மூப்பின் காரணமாக, எழுந்து நடமாட முடியாத நிலையில் இருக்கும்போது, அவரைக் கவனிக்க ஆசியராலும் முடியவில்லை; மனைவி சண்டைபிடிக்கிறாள். அப்போது வீரா மனமுவந்து ஆசிரியரின் அம்மாவுக்கான வேலைகளைச் செய்ய முன்வருகிறான். "கும்பிட வேண்டிய தெய்வம்' ஆகிறான்.
"காவல்நிலையம்' சிறுகதையில் காவல்நிலையத்தில் எடுபிடி வேலை செய்யும் ராஜு, காவல்நிலையத்தில் காவலர்களால் ஒரு பெண் பலவந்தம் செய்யப்பட்டு கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு எதிராக நிற்கிறான்.
விபத்து நிகழும்போது பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது "மனுஷம்' சிறுகதை. காலையிலிருந்து இரவு வரை குடும்பத்தில் பெண்கள் எவ்வாறு மனித இயந்திரம் போல் வீட்டு வேலைகளைச் செய்து கிடக்கிறார்கள் என்பதை மிகவும் துல்லியமாகச் சித்திரிக்கிறது "மனித யந்திரம்' சிறுகதை. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள எல்லாக் கதைகளும் உயர்ந்த மனிதப் பண்புகளின் தேவையை உணர்த்துபவையாக இருக்கின்றன.