அழகு ஏன் அழகாயிருக்கிறது? அழகின் நரம்பியல், உளவியல் விளக்கம் - க.மணி; பக்.106; ரூ.50; அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏ.கே.ஜி.நகர். முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை-641 015.
மனித வாழ்க்கையின் அடிப்படையாகத் தன்னைப் பேணுவதும், தன்னைப் போல் இன்னொன்றைப் பிறப்பிப்பதும் இருக்கின்றன. இந்த இரண்டும்
எல்லா மிருகங்களுக்கும் பொதுவானவை என்றாலும், மனிதனிடம் விளையாட்டும், கலை உணர்வும் இருப்பதுதான் மிருகங்களிடமிருந்து அவனைப் பிரித்துக் காட்டுகிறது.
"கலையின் மேற்பூச்சுக்குப் பின் காமம் மறைந்திருக்கிறது. பரதநாட்டியம், நாடகம், தெருக்கூத்து, கரகாட்டம் போன்றவற்றில் மெலிதாகக் காமம் இழையோடுவதைப் பார்க்க முடியும். அவை காம இச்சையின் வடிகால்கள்தானே' என்கிறார் நூலாசிரியர்.
கலையோடு தொடர்புபடுத்தி அழகையும் விளக்குகிறார். "ஓவியம், நடனம், இலக்கியம், இசை முதலிய கலை வடிவங்களில் இந்த ஒன்பாண் வகை ரசங்கள் வெளிப்படுவதைக் காணலாம். இவை யாவும் அழகே' என்று கூறும் நூலாசிரியர், அழகை உருவாக்க கலைகளில் மிகைப்படுத்துதல், தொகுத்தல், புதிர் அவிழ்த்தல், பிரதானப்படுத்துதல், உருவகம், பிரித்துக் காட்டல், நம்பகத்தன்மை, சமச்சீர்மை, சமநிலை, லயம் ஆகியவை தேவை என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
நவீன வாழ்க்கையில் "மிருக உயிராற்றல், உடல் தினவு ஆகியன மனிதனிடம் குறுக்கப்படுவதால், அவை பெருக்கெடுத்து ஓடி பண்பாடு குலைக்கப்படாமல் பாதுகாப்பதற்காகக் காதலும், வீரமும், கலையும் விளையாட்டுமாக மேன்மைப்படுத்தப்பட்டு மதிக்கப்படுகின்றன' என்று கலை, அழகு ஆகியவற்றுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவு பற்றி விளக்குகிறார்.
மாறிக் கொண்டே இருக்கும் வாழ்நிலை, பண்பாட்டுடன் கலை, அழகு ஆகியவற்றுக்கு உள்ள தொடர்பை ஆராய விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு தூண்டுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை.