உன்னுள் யுத்தம் செய் - இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.; பக்.224; ரூ.180; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044- 2435 3742.
"போராட்டம்தான் வாழ்க்கை. போராட்டம் என்பது நம்மோடு - ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தீமையை எதிர்க்கும் போராட்டம். நல்லதை உயர்த்தும் போராட்டம். போராட்டத்தின் உச்சநிலை யுத்தம். நமக்குள்ளே உள்ள நேர்மறை எண்ணங்களை, செயல்பாடுகளை உயர்த்தி, எதிர்மறை எண்ணங்களை, செயல்பாடுகளை நம்மிடம் இருந்து அழித்தால் வாழ்வில் வெற்றி உறுதி. இதுதான் நமக்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் யுத்தம்' என்று இந்நூலின் அடிப்படையை முன்னுரையிலேயே சொல்லி விடுகிறார் நூலாசிரியர்.
ஒருவர் தமக்குள் இருக்கும் தீமையை எதிர்க்கும் யுத்தத்தை எப்படி நடத்துவது என்பதை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளங்கும்விதமாக கதை வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
சின்ன வயதிலேயே குறிக்கோளை அழுத்தமாக இதயத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்; நாம் மகத்தானவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்; உண்மையான கல்வி கேள்வி கேட்பதில் அடங்கியிருக்கிறது; பிறருடன் யுத்தம் செய்பவன் வீரன், தன்னுள் யுத்தம் செய்பவன் ஞானி; நம்மேல் உள்ள நம்பிக்கையை, நம் திறமை மீது உள்ள நம்பிக்கையை ஒருநாளும் இழந்துவிடக் கூடாது; எத்தகைய கடினமான வேலையையும் உற்சாகத்தோடு செய்யும்போது அந்த வேலை சுலபமாக்கப்படும் என்பன போன்ற பல கருத்துகளை இளம் உள்ளங்களில் நன்கு பதியுமாறு எழுதப்பட்ட எளிமையான, சிறப்பான நூல்.