ஜீவா பார்வையில் கலை இலக்கியம் - கே.ஜீவபாரதி; பக்.240; ரூ.225; ஜீவா பதிப்பகம், 31, மனோகர் மேன்சன், 12/28, செளந்தரராஜன் தெரு, சென்னை-17.
தமிழகப் பொதுவுடமை இயக்கத்தின் தலைவர்களில் முக்கியமானவராக இருந்த ப.ஜீவானந்தம், பிற பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் இருந்து வித்யாசமானவர்.
கலை, இலக்கியம் தொடர்பாக அவர் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் இலக்கியம் பற்றி பேசாத, கவனத்தில் கொள்ளாத காலத்தில் கம்பனில் காணப்படும் ஜன
நாயகக் கருத்துகளை, பொதுவுடமைக் கருத்துகளைப் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி எல்லாம் ஜீவா பேசியிருக்கிறார்; எழுதியிருக்கிறார். அவை தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
"கலை இலக்கியத்துறையில் தி.மு.க. - ஒரு மதிப்பீடு' என்ற கட்டுரை தமிழ் இலக்கியம் பற்றிய தி.மு.க. தலைவர்கள், எழுத்தாளர்களின் பார்வையை விமர்சிக்கிறது. நல்ல இலக்கியம் எது? நசிவு இலக்கியம் எது? முற்போக்கான இலக்கியக் கண்ணோட்டத்தில் பழைய, சமகால இலக்கியங்களை எவ்வாறு பார்க்க வேண்டும்? எதார்த்தவாதம் என்றால் என்ன? என்பன போன்றவற்றை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் உள்ள கட்டுரைகள், இலக்கியத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்ற தெளிவை வாசகர்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும்.