ரசவாதி - பாலோ கொயலோ; தமிழில் - நாகலட்சுமி சண்முகம்; பக்.248; ரூ.225; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், இரண்டாம் தளம், உஷா ப்ரீட் காம்ப்ளக்ஸ், 42, மால்வியா நகர், போபால்-426003.
உலகம் முழுவதும் 8.5 கோடி பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்த "தி ஆல்கெமிஸ்ட்' நூலின் தமிழாக்கம் இது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும்.
சான்டியாகோ என்ற ஆடு மேய்க்கும் சிறுவன், யாருமே கண்டடைய முடியாத பொக்கிஷத்தைத் தேடி அலைகிறான். காடு, மலை, பாலைவனம் என பயணிக்கும் அவன், அவனுடைய வழியில் கண்ட காட்சிகளையும், அனுபவங்களையும் உயிர்ப்புடன் விவரிக்கிறார் நூலாசிரியர்.
இறுதியில் உண்மையான பொக்கிஷம், அகத்துக்குள்தான் அகப்பட்டு கிடக்கிறது என்ற நிதர்சனத்தை வாசகர்களிடையே விட்டுச் செல்கிறார் ஆசிரியர். இந்த நூற்றாண்டின் இணையற்ற நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், கற்பனைகளின் ஊடே தத்துவங்களை விதைத்துச் செல்கிறது.
கதையின் நாயகனாக வரும் சிறுவனுக்கும், அவனை வழியில் பார்க்கும் ரசவாதி ஒருவருக்கும் இடையேயான உரையாடல்கள், உள்ளத்தில் உறைந்து கிடக்கும் வாழ்வியல் தத்துவங்களை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளன.
வாழ்க்கைப் பயணத்தில் வலிகள் நிறைந்திருந்தாலும், இதயத்தின் ஈரத்தை ஒருபோதும் காயவிடக் கூடாது என்பதையும், கனவுகளை நோக்கிய தேடலை கைவிடக் கூடாது என்பதையும் திடமாக வலியுறுத்துகிறது இந்த "ரசவாதி'.