புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு - டாக்டர் எச்.வி.ஹண்டே; பக்.120; ரூ.300; வசந்தா பதிப்பகம், சென்னை-88; 044- 2253 0954.
மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் வரம் வெகு சிலருக்கே வசப்படும். அதில் எம்ஜிஆருக்கு தனியிடம் உண்டு. எம்ஜிஆர் உடல் நலிவுற்று அதிலிருந்து மீண்டதில் தொடங்கி, சில காலத்துக்குப் பிறகு அவர் மரணம் அடைந்தது வரைக்கும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
அவருடன் நெருங்கிப் பழகியவரும், அவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை இலாகாவை வகித்தவருமான மூத்த அரசியல் தலைவர் எச்.வி.ஹண்டேவால் எழுதப்பட்டது இப்புத்தகம் என்பது கூடுதல் சிறப்பு. எனவே, அதில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், பலரும் அறியப்படாதவையாகவும் உள்ளன.
மாநிலத்தின் முதல்வராக இருந்த எம்ஜிஆருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அன்றைய அரசியல் சூழல் எவ்வாறு மாறியது? வெகு ஜனங்களின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தன? என்பன போன்ற விவரங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமன்றி, எம்ஜிஆருக்கு அப்பல்லோ மருத்துவமனையிலும், பின்னர் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையிலும் அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அப்போது எதிர்கொண்ட சவால்கள் ஆகியவை காலவரிசைப்படி விளக்கப்பட்டுள்ளன.
எம்ஜிஆரின் இறப்பு தொடர்பாக பல்வேறு புத்தகங்கள் வெளியாகியிருந்தாலும், அவை அனைத்திலும் இருந்து வேறுபட்டும், அறிப்படாத பல தகவல்களின் தொகுப்பாகவும் விளங்குகிறது இந்நூல்.