திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் - மு.பி.பாலசுப்பிரமணியன்; பக்.288; ரூ.200; பாரி நிலையம், சென்னை-104; ) 044- 2527 0795 .
திராவிட இயக்கம் ஏன் தோன்றியது? அதற்கான பின்புலம் என்ன? என்பதை விளக்கும் கட்டுரைகளுடன் தொடங்கும் இந்நூல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிய கவிதை நூல்கள், புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், அவர்கள் நடத்திய இதழ்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அதுமட்டுமல்ல, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்களைப் பற்றியும், அவர்களின் குறிப்பிடத்தகுந்த சொற்பொழிவுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அறிவியல் தமிழை வளர்க்கும் நோக்கத்துடன் 1999 இல் நடத்தப்பட்ட தமிழ் இணையம் மாநாட்டைப் பற்றியும், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதைப் பற்றியும், "அறிவியல் தமிழ்' என்ற இதழைப் பற்றியும் கூறுகிறது.
திராவிட இயக்க கவிஞர்களான பாரதிதாசன், சுரதா, கண்ணதாசன், வாணிதாசன் முதல் இன்றைய கவிஞர்களான சல்மா, தமிழச்சி தங்கபாண்டியன் வரை பல கவிஞர்கள் எழுதிய நூல்கள் பற்றியும், அவர்கள் எழுதிய கவிதைகளில் தமிழுணர்வும், திராவிட உணர்வும் எவ்வாறெல்லாம் வெளிப்பட்டிருக்கின்றன என்பதை நூல் விரிவாகச் சொல்கிறது.
அதேபோன்று, அண்ணாதுரை, மு.கருணாநிதி, டி.கே.சீனிவாசன், எஸ்.எஸ்.தென்னரசு ஆகியோர் எழுதிய புதினங்களைப் பற்றியும் அவை சித்தரிக்கும் வாழ்க்கையைப் பற்றியும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
திராவிட இயக்க இதழ்களான குடி அரசு, திராவிடன், உண்மை, விடுதலை, பகுத்தறிவு உள்ளிட்ட பல இதழ்களின் தோற்றம், அவை வெளியிட்ட குறிப்பிடத்தகுந்த கட்டுரைகள், படைப்புகளைப் பற்றிய தகவல்களும் கூறப்பட்டுள்ளன. நூலாசிரியரின் கடும் உழைப்பில் இப்போது வரை திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் தமிழுக்கு அளித்து வரும் பங்களிப்பு இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.