மதுரையின் அரசியல் வரலாறு 1868 - ஜே.எச்.நெல்சன்; தமிழில்: ச.சரவணன்; பக்.352; ரூ.360; சந்தியா பதிப்பகம், சென்னை-83; )044- 2489 6979.
தூங்கா நகரம் என்று புகழ்பெற்ற மதுரை கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதும் நூலாசிரியர், இந்நூலில் "மதுரா தலபுராணம்' என்ற நூலில் கூறப்பட்டுள்ள 64 திருவிளையாடல்களை விவரிக்கிறார். அது மதுரையை ஆண்ட 73 பாண்டிய மன்னர்களைப் பற்றிய பட்டியலை வழங்குகிறது. கி.பி.1559 - இல் ஆட்சிக்கு வந்த விசுவநாதாவின் முக்கிய தளபதியாக இருந்த அரியநாயகா, மதுரை புதுமண்டபத்தில் குதிரை வீரன் சிலை ஒன்றை நிறுவியிருக்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டியவரும் அவரே.
திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கிராம கணக்கர்கள், வணிகர்கள், அதிகாரிகள், எழுத்தர்கள் தவிர, மக்கள் அனைவரும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
மதுரையைப் பாண்டியர்கள், இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள், சேதுபதிகள் என பல்வேறு வம்சங்களைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக நடத்திய போர்களினால், கொள்ளைகளினால் மதுரை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மதுரையில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பியவர்கள் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இவை போன்ற மதுரையைப் பற்றிய பல செய்திகளை இந்நூல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.