தமிழ் இலக்கியங்களில் தேசிய இயக்கத்தின் தாக்கம் - வை.சந்திரசேகர்; பக்.208; ரூ.200; அய்யா நிலையம், 10, ஆரோக்கிய நகர் முதல் தெரு, இ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613006.
தேசிய இயக்கத்துக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் உள்ள உறவை மிக விரிவாக, தெளிவாக எடுத்துரைக்கும் நூல். தமிழ் நாடகங்களில், கவிதைகளில், புதினங்களில், சிறுகதைகளில் தேசிய இயக்கத்தின் தாக்கம் எவ்விதம் செயற்பட்டது என்பதை நிறைய எடுத்துக்காட்டுகளுடன் இந்நூல் விவரிக்கிறது.
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை, தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்ட பல கவிஞர்களின் படைப்புகளில் காணப்படும் தேசிய சிந்தனைகளை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தேசத்தின் இருகண்களாகக் கொண்டு விடுதலைப் போருக்குத் தொண்டாற்றின என்கிறார்.
"வீரபாண்டிய கட்டபொம்மன்', "ஸ்ரீஆர்யசபா', "புலித்தேவன்', "செக்கிழுத்த சிதம்பரனார்', "தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்', "தேசபக்தி', "கவியின் கனவு' உள்ளிட்ட பல நாடகங்களைப் பற்றியும், நாடகங்களில் இடம் பெற்ற பாடல்களை எழுதியவர்கள், பாடகர்கள் ஆகியவர்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ள தகவல்கள் வியக்க வைக்கின்றன. கா.சீ.வேங்கடரமணி, கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன், நல்லபெருமாள் ஆகியோர் எழுதிய நாவல்களில் தேசிய இயக்கத்தின் தாக்கங்கள்
உள்ளதை நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். காந்தியத்தை ஏற்பவர்கள், எதிர்ப்பவர்கள், போலி காந்தியவாதிகள் ஆகியோரை இந்நாவல்கள் கதாபாத்திரங்களாக வடித்தெடுத்து, காந்தியடிகளின் கொள்கைகளைப் பரப்புவதாகக் கூறியிருக்கிறார். இதேபோன்று தேசிய வளர்ச்சிக்கு பெண்களின் முன்னேற்றம் தேவை என்பதை சிறுகதைகள் வலியுறுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார். சிறந்த நூல்.