ஸ்ரீ ராதே - ஒரு கடவுள் காவியம்- தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா; பக்.376; ரூ. 400; ஓங்காரம், புதுச்சேரி-1; 0413 - 2335551.
ஸ்ரீ கிருஷ்ணனை என்றென்றும் நினைத்து வாழ்ந்தவர்கள் கோபியர்கள். உண்மையான நேர்மையான பக்திக்கு உதாரணமாக திகழ்ந்தவர்கள் இவர்களே எனலாம். கடவுளிடம் ஏற்படும் அதீத பிரேமை பரமாத்மாவுடன் ஜீவாத்மா இணையும் நிலையை உண்டாக்கும் என்பார்கள். மேலும் பிரம்மத்தை அறிந்துணர்ந்தவர்கள் பிரம்மாவாகவே ஆகிவிடுகிறார்கள் என்பது வேத வாக்கு. அதன்படி, கோபியர்கள் தங்கள் தூய பிரேமையினால் ஆழ்ந்த, அளவிடமுடியாத பக்தியில் அவர்களும் வாழும் கிருஷ்ணரின் பிரதி பிம்பங்களாகவே மாறிவிட்டார்கள் எனலாம். இந்நூல் இவற்றையெல்லாம் விரிவாக விளக்குகிறது.
ஜெயதேவர் அஷ்டபதி கீத கோவிந்தத்தில், "ராதா- கிருஷ்ணன் இருவரின் உலகியல் உறவை பெரிதுப் படுத்திப் பேசுவது என்பது ஏற்புடையதாகாது. ராதா ஒரு ஜீவன், கிருஷ்ணன் பகவான் - பரமாத்மா! அவ்வளவே' என்கிறார். இந்நூலில் ராதாவின் பிறப்பு, ராதை வந்த வரலாறு, கிருஷ்ண மார்க்கம் பற்றிய உண்மையான கருத்துகள், ஸ்ரீ சைதன்யர் கிருஷ்ண பகவானேஅனைத்துக்கும் மூலம் என்ற அவரது போதனை, வேதங்கள் கூறும் ராதையின் ரகசியங்கள், ராதையின் பெருமையைச் சொல்லும் புராணங்கள், அவை கூறும் ராதாகிருஷ்ண தத்துவங்கள், இதிகாசங்களில் ராதையின் பெருமை, ராதா நாம ஜெப மகிமை, ஸ்ரீ ராதா கவசம், அஷ்டகம், கீர்த்தனைகள், யந்திரங்கள், அஷ்டோத்திரம், ராதா தந்திரா தத்துவம் என்று ராதையின் பெருமைகளையும் உள்ளார்ந்த உண்மைகளையும் பக்தியின் ஆழத்தையும் நெறியையும் நமக்கு எடுத்தும் காட்டும் புனித நூலாக இந்நூல் திகழ்கிறது.