மனைவி அமைவதெல்லாம் - தொகுப்பாசிரியர்: சி.வீரரகு ; பக்.200; ரூ.150; சத்யா பதிப்பகம், மனை எண்.98, கதவு எண்.8, நேதாஜி தெரு, வ.உ.சி.நகர், பம்மல், சென்னை-75.
மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்று, தண்ணீர் மிகவும் அவசியம். அதுபோல் ஒரு குடும்பம் நிலைக்க, சிறக்க, மனைவி என்னும் திறவுகோல் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் சாதனை நிகழ்த்திய ஓர் ஆணின் பின் அவருடைய மனைவி இருப்பதை விரிவாக எடுத்துரைக்கும்நூல்.
இல்லறம் நல்லறமாக கணவன்- மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் நூலாசிரியர், திருவள்ளுவருக்கு வாசுகி, பாரதிக்கு செல்லம்மாள், காந்தியடிகளுக்கு கஸ்தூரிபாய், நேருவுக்கு கமலா உட்பட பல இணையர்கள், ஒருவர் சாதனை புரிய இன்னொருவர் எவ்வாறு உதவியாக இருந்தார்கள் என்பதை நூலாசிரியர் சிறப்பாக விளக்கிக் கூறியிருக்கிறார்.
இவர்கள் தவிர புராண, இதிகாச, காப்பிய கதாபாத்திரங்களில் கருத்தொருமித்து வாழ்ந்த பலரையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். பெண்ணின் பெருமை பேசும் பகுதிகள் தவிர, தெரிந்து கொள்வோம் என்ற தலைப்பிலும், பொது அறிவு என்ற தலைப்பிலும் நமக்குத் தேவையான பல தகவல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.