கூண்டுக்குள் பெண்கள் - விலாஸ் சாரங்; தமிழில்: ஆனந்த் ஸ்ரீனிவாசன் ; பக்.320; ரூ.350; நற்றிணை பதிப்பகம், 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005.
மராத்தி மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளரான விலாஸ் சாரங் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல கல்லூரிகளில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய நூலாசிரியரின் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு நேரடித் தொடர்பில்லாத பல்வேறு அனுபவங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 26 சிறுகதைகளில் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
"கூண்டுக்குள் பெண்கள்' சிறுகதை மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள வயதாகிக் கொண்டிருக்கிற ஒரு பெண்ணின் கதை. இக்கதை மூலம் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் சிரமம் மற்றும் அனுபவங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. "கடற்கரையில் ஒரு மாலை'
சிறுகதை நிரந்தர வருமானமில்லாத ஒருவனுக்கும் ஓர் ஏழைப் பெண்ணுக்கும் இடையிலான உறவு குறித்த கதை. "கஸ்தூரி மான்' சிறுகதை மும்பையில் உள்ள பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை இயல்பாகச் சித்திரிக்கிறது.
"ஓம் லிங்கம்' முழுக்க முழுக்க கற்பனை சார்ந்த சிறுகதை எனினும் அது வெளிப்படுத்தும் வாழ்க்கைப் பார்வை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. "ஈக்கள்' சிறுகதை அதன் நாயகன் ஈக்களைக் கொல்வதும், அவற்றைக் கூர்ந்து நோக்கலும், அந்த அனுபவங்களில் மூழ்கிப் போதலும், அவனுடைய உடல், உளத் தேவைக்கான மாற்றாக இருப்பதைச் சித்திரிக்கிறது. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள், வாசகர்கள் இதுவரை அறிந்திராத பல்வேறு பிரிவு மக்களின் உலகங்களையும், அனுபவங்களையும் துல்லியமாகச் சித்திரிக்கின்றன.