பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை - அரங்க.இராமலிங்கம்; பக்.160; ரூ.120; வானதி பதிப்பகம், சென்னை-17; 044- 2434 2810.
புரட்சிக் கவிஞர் என்று அறியப்பட்ட பாரதிதாசன் படைப்புகளில் காணப்படும் நகைச்சுவை பற்றி ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
நகைச்சுவை என்றால் என்ன? என்பதை நூலின் முதல் கட்டுரையான "நகைச்சுவையும் பாரதிதாசனும்' விளக்குகிறது. நகைச்சுவை உணர்வை பாரதிதாசன் எவ்வாறு கையாண்டார் என்பதையும் அது கூறுகிறது.
"நகைச்சுவை என்பது இருபக்கமும் கூர்மையான வாள். அதை மிகத் திறமையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அது பயன்படுத்துபவரையே தாக்கிவிடும் ' என்று கூறும் நூலாசிரியர், பாரதிதாசன் எழுதிய பாடல்களில், நாடகங்களில், கதைகளில், திரைப்படங்களில் நகைச்சுவை எந்த அளவுக்கு இடம் பெற்றிருக்கிறது என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் மிகச் சிறப்பாக விளக்கியிருக்கிறார். பாரதிதாசன் படைப்புகளில் இடம் பெற்ற நகைச்சுவை மாந்தர்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
"மக்கள் மனதில் மண்டியிருக்கும் குருட்டு நம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் அகற்றவும், அறியாமை இருளில் ஆழ்ந்து கிடப்போரைக் கரையேற்றவும் புரட்சிக்கவிஞரான பாரதிதாசன் துடிப்பது இயல்பு. சமுதாயத்தைச் சரிப்படுத்த அவர் படைக்கும் நகைச்சுவை பயன்படுகிறது' என்ற நூலாசிரியரின் கருத்து, இந்நூலில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.