அறிவுப் பேழை - போட்டித் தேர்வுகளுக்குரிய தொகுப்புகள்- இராஜா வரதராஜா, இராஜா ரமேஷ்; பக்.312; ரூ.250; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1; ) 0452- 234597.
போட்டித் தேர்வு எழுதக் கூடியவர்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு தகவல்கள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியம், அறிவியல், உலகம், இந்தியா, தமிழ்நாடு, விளையாட்டு, சாட்டுப் பெயர், அளவீடு, சொல், குறியீடு விளக்கம், கதம்ப மலர் ஆகிய பிரிவுகளில் அவை சார்ந்த ஏராளமான தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
போட்டித் தேர்வு எழுதாதவர்களும் இந்நூலில் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய தகவல்கள் உள்ளன. உலக அன்னையர் தினம், தந்தையர் தினம் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலக கைகழுவும் தினம், உலக இட்லி தினம் இருப்பதை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். "ஒரே அமர்க்களம் செய்கிறார்' என்று சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அமர்க்களம் என்பது போர் செய்யும் இடம் என்று இந்நூல் குறிப்பிடுகிறது. தேக்கரண்டி என்பதன் அளவு 4 மி.லி.; மேசைக் கரண்டியின் அளவு 16 மி.லி. என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது குறிஞ்சி மலர் என்பது எல்லாருக்கும் தெரியும். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர் தாழிப்பனையாகும்.
இவ்வாறு எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவையான பல தகவல்களின் திரட்டு இந்நூல்.