காதம்பரியம் - அமர்நாத்; பக்.288; ரூ.270; வெல்லும் சொல், 30 ஏ, வ.உ.சி.தெரு, ஜெயின் கல்லூரி ஊழியர்கள் குடியிருப்பு, நங்கநல்லூர், சென்னை-61.
காதம்பரி என்ற பெயர் கொண்ட முன்னாள் தமிழ் நடிகையின் கதை. 22 வயதுக்குள் 20 படங்களில் நடித்து முடித்து இனி நடிப்பதில்லை என்ற முடிவுடன் அமெரிக்காவில் உள்ள சித்தப்பா வீட்டுக்குப் பயணமாகிறாள் கதையின் நாயகி.
சித்தப்பாவின் வீட்டில் பிரேமசந்திரன் என்ற இளைஞனைச் சந்தித்துக் காதல் வயப்படுகிறாள். அவள் நடிகை என்பதைத் தெரியாது அவனும் விரும்புகிறான்.
சினிமாவை முற்றிலும் துறந்த அவள், மனைவி, தாய் என்ற புது கதாபாத்திரங்களை ஏற்கிறாள்.
துணைப் பேராசிரியரான பிரேமசந்திரன் அன்பும் ஆதரவும் கொண்ட கணவன். மித்ரா, ப்ரியம் வதா என்ற குழந்தைகள்.
ஒருவரை ஒருவர் ஆராதிக்கும் பெற்றோரின் வாழ்க்கை மித்ராவைக் கவர்கிறது.
திரைப்படக் கலையில் எம்எஃப்ஏ பட்டம் வாங்க இருக்கும் அவன், தாய், தந்தையின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் "காலம் காதலை தொட்டுக்க முடியாது' என்ற குறும்படம் ஒன்றைத் தயாரிக்கிறான். திருமண வாழ்க்கையை இன்னொரு தடவை வாழ்ந்துவிட்டோம் என்று புளகாங்கிதம் அடைகிறாள் காதம்பரி.
வீட்டுக்கு வேலை செய்ய வந்து அத்தை என்ற அந்தஸ்தைப் பெறும் சந்திரவதனா, மித்ராவை மணந்து கொள்ள இருக்கும் மாளவிகா, டாக்டர் லிப்டன் பாத்திரங்களும் மறக்க முடியாதவை. எனினும் நாவல் முழுவதும் காதம்பரியே ஆதிக்கம் செலுத்துகிறாள்.
ஒரு சில நாவலைப் படிக்கும்போது அக்கதையில் வரும் பாத்திரங்களுடன் நம்மையும் அறியாமல் ஒன்றிவிடுவோம். இந்த நாவலைப் படித்து முடித்த பின்பும் கொஞ்ச நாளைக்கு நமக்கு ஒரு பிரிவுத் துயரம் இருக்கத்தான் செய்யும்.