அர்த்தமற்ற மனித மனம் (அறம், மரம் மறந்ததேனோ) - வ.ராஜ்குமார்; பக்.176; ரூ.160; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; ) 044- 2436 4243.
அறம் என்பது ஒழுக்கப் பண்புகளையும், மரம் என்பது இயற்கைச் செல்வத்தையும் குறிக்கும். ஒழுக்கமாகிய அறத்தையும், இயற்கைச் செல்வமாகிய மரத்தையும் வளர்ப்பதுவே நம் எல்லாருடைய இலக்காக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
முக்கிய நிகழ்வுகளில் தங்களின் உண்மையான முகத்தைக் காட்டும் தருணங்களில் மட்டுமே மனிதர்களின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ள முடியும். சாதாரணமாகத் தெரிந்து கொள்ள முடியாது என்று கூறும் நூலாசிரியர் தான் படித்த, கற்றுக் கொண்ட அனைத்தையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.
மிக ஆழமான விவாதத்துக்குரிய பல விஷயங்களை மிக எளிதாகச் சொல்லும் நூலாசிரியரின் எழுத்துத்திறன் வியக்க வைக்கிறது. "மனிதனுக்கு போதும் என்ற மனப்பக்குவம் கொஞ்சமல்ல நிரம்பவே குறைவு.
ஆகையால்தான் அவன் நிறைய எதிர்பார்க்கிறான்', "சிந்தனை நல்லவையாக இருத்தல் வேண்டும். செயல் நல்லவையாக இருத்தல் வேண்டும். இவையிரண்டும் நல்லவையாக இருந்தால் முடிவு நல்லவையாக இருக்கும்' என்பவை சில எடுத்துக்காட்டுகள். மனித வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் பேசும் நூல்.