நகுலன் கதைகள்- தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்; பக்.349; ரூ.350; காவ்யா, சென்னை -24; ) 044-2372 6882.
ஐந்து குறு நாவல்கள், 32 சிறுகதைகள், இரண்டு மொழிபெயர்ப்பு கதைகள் என 1959 முதல் 1995 வரை கணையாழி உள்பட பல்வேறு இதழ்களில் வெளியான நகுலனின் 39 கதைகளின் தொகுப்பு இது. சில கதைகள் விடுபட்டுள்ளன.
யதார்த்த நிகழ்வுகளை காட்சிப்படுத்தி தேவைக்குத் தக்க சில இடங்களில் புனைவை சேர்த்து இரண்டையும் வாசகரால் பிரித்தறிய முடியாதவாறு ஒவ்வொரு கதைகளும் உள்ளன. சிறுகதைகளில் வர்ணனைகளை மிகவும் மட்டுப்படுத்தி ஓரிரு நிமிடங்களில் கதைகள் முற்றுப் பெறுகின்றன. ஆனால் அவை சமூகத்தின் மீதும் மனிதத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரியது.
ஒளிவு, மறைவு எதுவுமின்றி நேர்கோட்டுப் பாணியில் பயணிக்கும் நகுலனின் கதைகள் வாசகனை அரவணைத்து எந்த நெருடலுமின்றி துக்கங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து செல்கின்றன.
பெரும்பாலான கதைகள் மரணத்தை மையப்படுத்தி இருந்தாலும் அவை சலிப்பை ஏற்படுத்தாமல் வாழ்வின் நிலையாமையை எடுத்தியம்புகின்றன.
உலகியல் மதிப்பீடுகள் குறித்து நகுலனின் கதைகள் எந்த மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனாலேயே அவை ரசனை மிக்கதாய் இருக்கின்றன. மாயத் தோற்றத்தை ஏற்படுத்தாமல் மனிதாபிமானம் முதல் மரணம் வரை தனது கதைகள் வழியே நகுலன் பயணிக்கிறார்.