அழகிய இந்தியா - தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம் - தரம்பால்; தமிழில் - பி.ஆர். மகாதேவன்; பக். 264; ரூ. 300; கிழக்கு பதிப்பகம், சென்னை -14; )044-4200 9603.
தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம்தான் அழகிய இந்தியா என்ற இந்த நூல் என்றாலும் அவரைப் பற்றிய, அவருடைய எழுத்துகள் பற்றிய விரிவான சித்திரத்தை நம் முன்வைக்கிறது.
"பிரிட்டிஷார் வருவதற்கு முன்னரே இந்தியாவில் கல்வி நிலை உலகின் பிற பகுதிகளை விடச் சிறப்பாக இருந்தது; பிரிட்டிஷார் இங்கு வந்து பாரம்பரியக் கல்வி எனும் அந்த அழகிய மரத்தை வேர் வரை அகழ்ந்து ஆராயத் தொடங்கினர். பின்னர் அழகிய அந்த மரத்தை அப்படியே மக்கிப் போகச் செய்துவிட்டனர்' என்று லண்டன் வட்டமேஜை மாநாட்டில் மகாத்மா காந்தி தெரிவித்த கருத்தை எல்லா வகையிலும் உறுதிப்படுத்துவதே தரம்பாலின் எழுத்துகள்.
இவற்றுக்கான சான்றுகளாகத் தரம்பால் குறிப்பிட்டிருப்பவை பெரும்பாலும் (லண்டன் நூலகத்தில் தேடியெடுக்கப்பட்ட) அதிகாரப்பூர்வ பிரிட்டிஷ் ஆவணங்கள் என்பது கூடுதல் சிறப்பு. இந்தியாவின் மறுகண்டுபிடிப்பாக நான்கு நூல்களை எழுதியுள்ளார் தரம்பால்.
நாட்டின் பாரம்பரியக் கல்வி முறைகள் பற்றி, அழகிய மரம் - 18-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பாரம்பரியக் கல்வி, நாட்டின் தொழில்
நுட்பத் திறன் பற்றி, 18-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் அறிவியலும் தொழில்நுட்பமும், இந்தியப் பாரம்பரியத்தில் மக்கள் ஒத்துழையாமை, பஞ்சாயத்து ஆட்சியும் இந்திய அரசியலும் - ஆகியவை இந்த நூல்கள்.
எண்ணற்ற தரவுகளையும் ஏராளமான சான்றாதார ஆவணங்களையும் கொண்ட இந்த நூல்கள் ஒவ்வொன்றிலும் அவற்றின் சாராம்சத்தை நீண்ட முன்னுரைகளாக எழுதியிருக்கிறார் தரம்பால். இந்த முன்னுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
நூல் நெடுகிலும் ஏராளமான சம்பவங்கள், அவை தொடர்பான சான்றுகள், அதிகாரபூர்வமான கடிதங்கள் என நிறைத்திருக்கிறார் நூலாசிரியர்.
"கலெக்டட் வொர்க்ஸ்' என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான இந்த நூலை பி.ஆர். மகாதேவன் மிக நன்றாக தமிழாக்கியிருக்கிறார்.