நலம் தரும் நாற்பது - இரா.இராஜாராம்; பக்.140; ரூ.140; ஜீவா படைப்பகம், 351, எம்ஐஜி, என்எச் -1, நக்கீரர் தெரு, மறைமலை நகர், காஞ்சிபுரம்-603209.
தினமணி, கலைக்கதிர், புதிய தென்றல், ஆனந்தயோகம், மஞ்சரி ஆகிய இதழ்களில் வெளிவந்த 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சிறந்த வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அமைந்த கட்டுரைகள்.
அமைதியும் ஆனந்தமும் நிறைந்ததாக மனம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கட்டுரை, அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறது.
காலம் எவ்வளவு அருமையானது என்பதை விளக்கும் நூலாசிரியர், பணியிடங்களுக்குத் தாமதமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். " மேலும் நாம் ஊதியத்தில் சற்று குறைவு ஏற்பட்டாலும், ஏன் என்று கேட்கத் தயங்கமாட்டோம். அப்படியிருக்கும்போது, பணிக்குத் தாமதமாகச் சென்று முழு ஊதியத்தையும் பெறுவது என்பது எந்த வகையில் சரி?'' என்று கேட்கிறார். உண்மையில் பல நிறுவனங்களில் தாமதமாகப் பணிக்கு வருபவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்வது நடைமுறையில் உள்ளது.
"கெளரவமான வாழ்வு எது?' என்ற கட்டுரையில், "இந்தக் கடன் வாங்கும் போக்கு பல்கிப் பெருகியதற்குத் தகுதிக்கு மீறிய செலவினங்களும், ஆடம்பர, பகட்டு வாழ்க்கையும் ஒரு காரணம் எனலாம்' என்கிறார். எதிர்பாராத விபத்துகள், நோய்களினால் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதும் உண்மை.
"இரவுத் திருமணமும் தேவராட்டமும்' கட்டுரை, எட்டயபுரம் அருகே உள்ள நாவலக்கம்பட்டி என்ற கிராமத்தில் நடைபெற்ற கம்பளத்தார் இல்லத் திருமணம் இரவு நேரத்தில் நடைபெறுவது, தேவராட்டம் நடைபெறுவது ஆகியவை இந்தியாவின் தொன்மையான கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதை விளக்குகிறது.
இனிய கிராமியச் சூழலும் தற்சார்புடைய உழவுத் தொழிலையும் விரும்பிச் செய்திடும் காலம் வெகுவிரைவில் வர வேண்டும் என்று "கிராமிய மணம் எங்கே?' கட்டுரை சொல்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆடம்பரமின்மை, தேவையில்லாதவற்றைத் தவிர்த்தல், உடல் நலம் காத்தல், கலாசாரம், தேர்தல் என இன்றைய வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் பற்றி ஆசிரியரின் தெளிவான கருத்துகள் அடங்கிய நூல்.