கிணற்றுக்குள் காவிரி - ஜெ. பாஸ்கரன்; பக்.146; ரூ.160; சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே. புதூர், கோவை- 38.
நூலாசிரியர் ஜெ. பாஸ்கரன், அடிப்படையில் நரம்பியல் மருத்துவர். பல்வேறு பருவ இதழ்களில் அவர் எழுதிய 21 சிறுகதைகளின் தொகுப்புதான் "கிணற்றுக்குள் காவிரி'. ஏழாவது சிறுகதை "கிணற்றுக்குள் காவிரி'.
அத்தனைக் கதைகளும் முத்தான கதைகள். இயல்பான மொழியில் (ஓரிரு மருத்துவச் சொல்லாடல்கள் தவிர) நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் கதைகள் அவை. பெரும்பாலானவை பெண்களை மையப்படுத்திய சிறுகதைகளே.
ஒவ்வொன்றும் வெவ்வேறு சமூகத் தளத்தில் பயணிக்கின்றன. இந்தக் கதை எப்படி முடியப் போகிறது என்ற ஆவலோடு வாசிக்க வைக்கும் கதைகள். எல்லா வகையான தளங்களிலும் பயணம் செய்யும் கதைகள், கதாசிரியருக்கு வாய்த்திருக்கும் திறமை என்றுதான் சொல்ல வேண்டும்.
மிக முக்கியமாக, இளைய தலைமுறையினருக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கோவையை மையமாகக் கொண்ட "சிறுவாணி வாசகர் மையம்' தங்களின் உறுப்பினர்களுக்காக மாதம் ஒரு நூலை வெளியிட்டு வருகிறது; அந்த வரிசையில் 'கிணற்றுக்குள் காவிரி' 35ஆவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.