"பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் - வாழ்க்கைப் பயணம்- ஸய் விட்டேகர்; தமிழில்: கமலாலயன்; பக்.448; ரூ. 500; வானதி பதிப்பகம், சென்னை -17; )044- 2434 2810.
"பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் வாழ்க்கைப் பயணம் - ஒரு வாழ்க்கை வரலாறுதான். என்றபோதிலும் ஒரு நாவலுக்குரிய சுவாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் ரசித்துப் படிக்கும்படியாகச் செல்கிறது.
சென்னையின் பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள முதலைப் பண்ணை ஆகியவற்றின் பின்னால் எத்தகைய உழைப்பு இருந்திருக்கிறது, எத்தகைய மனிதர்கள் உழைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் விவரிக்கிறது இந்த நூல்.
ஆங்கிலத்தில் "ஸ்நேக் மேன்' என்ற பெயரில் வெளிவந்த - நூலின் நாயகனான ரோமுலஸ் விட்டேகர் பற்றிய - மிக முக்கியமான காலகட்ட வரலாற்றை எழுதியிருக்கிறார் ஸய் விட்டேகர்.
சென்னை பாம்புப் பண்ணையின் தோற்றமும் அதைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயமும் வலி மிகுந்தவை. முதலைப் பண்ணையின் தோற்றமும் வளர்ச்சியும் உற்சாகமளிப்பது. ரோமுலஸின் வாழ்க்கைப் பயணம்தான் என்றாலும் ஸய் விட்டேகரின் பயணமும் சிறந்த முறையில் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தங்களுடைய திருமணக் காலம், காடேகுதல்கள், அந்தமான் பற்றிய விவரிப்புகளில் தம்மை மிகச் சிறந்த எழுத்தாளரென உறுதிப்படுத்தும் ஸய் விட்டேகர், தூத்துக்குடி இறைச்சிச் சந்தையில் ஆமைகளுக்கு நேரிடும் கொடுமையை விவரிக்கும்போது சிறந்த பத்தி எழுத்தாளராக மாறுகிறார்.
நூலில் உள்ள எண்ணற்ற தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. ஆங்காங்கே இடம் பெற்றுள்ள ஓவியர் ப்ரூஸ் பெர்க்கின் ஓவியங்கள் மிகச் சிறப்பாகவும் தத்ரூபமாகவும் இருக்கின்றன.
மொழிபெயர்ப்பு என்றே உணர முடியாத அளவுக்கு மிக அருமையாக இருக்கிறது, கமலாலயனுடைய மொழிபெயர்ப்பு.