முகநூல் பதிவுகள் - பெ.சுபாசுசந்திரபோசு; பக்.192; ரூ.200; சிந்தியன் பதிப்பகம், சென்னை-35; )044- 2434 3806.
முகநூல் பதிவுகளாக இருந்தாலும் நூலாசிரியர் கூறியுள்ளபடி இந்நூல் தமிழ் மொழி முதல் பசிபிக் கடற்கரை வரை நம்மை அழைத்துச் செல்கிறது. அமெரிக்கப் பயண அனுபவங்கள், தமிழ் இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள், தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகங்கள், சிங்கப்பூர் பற்றிய செய்திகள், ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்கள் என நூலின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது.
நாமறியாத பல தகவல்கள் நூல் முழுவதும் நிரம்பியிருக்கின்றன.
தமிழ்நாட்டில் புனித மரமாகவும், வழிபாட்டு மரமாகவும் இருப்பது அரச மரம். ஆனால் இது தமிழ்நாட்டு மரமில்லை. தொல்காப்பியத்தில், சங்க இலக்கியங்களில் இம்மரம் பற்றிய குறிப்பு ஏதுமில்லை. இது இமயமலைப் பகுதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்த மரம்.
கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் வீட்டில் மருத்துவம் படிக்க அவரை வற்புறுத்தினர். ஆனால் அவர் மருத்துவம் படிக்காமல், கவிதை எழுதி நோபல் பரிசு பெற்றார்.
கிரேக்க, ரோமானியர்கள் சேர நாட்டு முசிறிக்கு வந்து தங்கக்கட்டிகளைக் கொடுத்துவிட்டு, மிளகை வாங்கிச் சென்று உள்ளனர். மிளகை யவனப் பிரியா என்றும் பச்சைத் தங்கம் என்றும் அழைத்துள்ளனர்.
ஜெர்மனியில் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்தோடு விடுமுறை வழங்குவது வீண் செலவு என்று தனியார் நிறுவனங்கள் கருதுகின்றன. இதனால் பெண்கள் கர்ப்பப்பையை நீக்கிய சான்றிதழைக் காட்டி வேலைக்கு விண்ணப்பிக்கும்போக்கு இருக்கிறது.
இவை போன்ற பல தகவல்களின் களஞ்சியமாக, பழைய வரலாற்றுச் செய்திகள் முதல் சமகாலப் பிரச்னைகள் வரை வாசகர்களின் அறிவுக்கு விருந்தாக இந்நூல் திகழ்கிறது.