முறையிட ஒரு கடவுள் -சர்வோத்தமன் சடகோபன்; பக்.160; ரூ.150;மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - 636453.
சர்வோத்தமன் சடகோபன் எழுதிய முறையிட ஒரு கடவுள் எனும் சிறுகதைத் தொகுப்பு அருமையான உரையாடலை நம்முள் நிகழ்த்துகிறது. வார்த்தைகளில் சிக்கல்களைக் கொடுக்காமல் கதைகளைப் பரிமாறுவதில் தன்னை சிறந்த எழுத்தாளராக நிலைநிறுத்தியுள்ளார் சடகோபன். மொத்தம் 13 கதைகள் இடம்பெற்றுள்ள இந்த சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் போது ஏற்படும் எதிர்பார்ப்பும், ஆவலும் அனைத்து கதைகளிலும் நம்மை விடாமல் பீடித்திருக்கின்றன.
மணல்வீடு, காலச்சுவடு ஆகிய இலக்கிய இதழ்களில் தொடங்கி தமிழினி, தளம் உள்ளிட்ட இணைய இதழ்களில் வெளிவந்த சிறுகதைகள்இந்நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அதற்கே உரிய தனித்தன்மையுடன் வாசகர்களைக் கவர்கின்றன.
சிறுகதைகள் பொதுவாக குறிப்பிட்ட எல்லையில் முடிந்து விடுகின்றன. ஆனால் முறையிட ஒரு கடவுள் சிறுகதையும் சரி, அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களும் சரி நம்முடன் அன்றாடம் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் நம் நினைவில் ஆழப்பதிகின்றன. உதவி, நடிகர், பிளவு என்பன அவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நிகழ்த்தி இருக்கின்றன.
இந்நூலில் உள்ள கதைகளின் கதைக்களம் இயல்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. காட்சி விவரிப்பு, கதாபாத்திரம் வடிவமைப்பு, கதைக்களம் தேர்வு என அடிப்படையானவை திகட்டாமல் கச்சிதமாக அமைக்கப்பட்டு வாசகர்களை எளிதில் சென்றடையும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது நூலாசிரியரின் வெற்றி.