குருபக்தி மிக்க குட்வின் (சுவாமி விவேகானந்தரின் வலது கை) - நாரை. ச.நெல்லையப்பன்; பக்.102; ரூ.70; ராமகிருஷ்ண மடம், ஊட்டி; - 0423- 2443150.
சுவாமி விவேகானந்தரின் உரைகள் அனைத்தும் நூலாகத் தொகுக்கப்பட்டு விவேகானந்த இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. அதற்கு அடிப்படைக் காரணமானவர், அப்பணியை சிரமேற்கொண்ட பத்திரிகையாளர் ஜே.ஜே.குட்வின். அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுக வரலாறே இந்நூல்.
1893 செப்டம்பர் 11-இல் அமெரிக்காவின் சிகாகோவில் நிகழ்ந்த சர்வ சமயப் பேரவையில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைக்குப் பிறகு உலகப் புகழ் பெற்றவரானார். அதன் பிறகு பல நாடுகளில் ஆன்மிகப் பிரசாரம் செய்தார்.
சுவாமிஜியின் உரைகளைத் தொகுக்க வேண்டுமென்ற எண்ணம் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் வேதாந்த சங்கத்துக்குத் தோன்றியபோது, அவர்கள் 1895-இல் வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தால் கிடைத்த இளைஞர்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோசையா ஜான் குட்வின்.
1895 முதல் 1898 வரையிலான மூன்று ஆண்டுகளில் சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக உரைப்பெருக்கு பேரளவில் இருந்தது. குட்வினின் தேர்ந்த உழைப்பால், பல வெளிநாடுகளில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைகள் முழுமையாகவும், பொருள் பிறழாதவையாகவும் நமக்குக் கிடைத்தன.
குட்வினின் இளமைப்பருவம், சுவாமி விவேகானந்தரிடம் சுருக்கெழுத்து உதவியாளராகச் சேர்ந்தது, அவரது அணுக்கத் தொண்டராக மாறியது, ராமகிருஷ்ணர் இயக்கத்தில் அவரது பணிகள், இறுதி நாட்கள், அவரது மறைவால் விவேகானந்தருக்கு ஏற்பட்ட வேதனை, சுவாமிஜியின் இரங்கல் கவிதை, முக்கியமான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை மிகவும் சிரமப்பட்டுத் தொகுத்த நூலாசிரியரின் பக்திப்பூர்வமான முயற்சி இந்நூலில் வெளிப்படுகிறது.