திருநெல்வேலி-நீர்-நிலம்-மனிதர்கள்; இரா.நாறும்பூநாதன்; பக்.: 270; ரூ.270; சந்தியா பதிப்பகம்,சென்னை-83, ) 044-2489 6979.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மண்ணின் சிறப்புகள் பற்றிய 41 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு முதல் குற்றால குறவஞ்சி வரை தெரிந்த விஷயங்கள் பற்றிய தெரியாத விவரங்களை சுவாரசியமாகத் தந்திருப்பது சிறப்பு.
தஞ்சையில் பிறந்து திருநெல்வேலிக்கு வந்து ஏழை, எளிய மக்களுக்கு கல்விக் கொடையளித்த கிளாரிந்தா, ஆசியாவிலேயே பெரிய கண் பார்வையற்றோர் பள்ளியை பாளையங்கோட்டையில் தொடங்கிய ஆஸ்க்வித் ஆகியோரின் வரலாறு, நெல்லைச் சீமையில் 19-ஆம் நூற்றாண்டில் பல்வேறு கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட சூழலில் 1859-இல் தொடங்கப்பட்ட மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியின் வரலாறு ஆகியவை தகவல் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.
தமிழ் இலக்கியத்துக்கு இஸ்லாமிய சமூகத்தின் மிகப்பெரிய கொடையாகக் கருதப்படும் சீறாப்புராணம் தந்த உமறுப்புலவர், மெய்மறக்கச் செய்யும் நாதஸ்வர இசையைத் தந்த காருகுறிச்சி அருணாசலம் ஆகியோரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் சுவையான கட்டுரை வடிவம் பெற்றுள்ளன.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாட்டு துறைமுகங்களுள் புகழ்பெற்று விளங்கிய கொற்கை, தென்னகத்து எல்லோரா என அழைக்கப்படும் கழுகுமலை குடைவரைக் கோயில், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் பற்றிய கட்டுரைகள் அந்தந்த இடங்களுக்கு நம்மை சுற்றுலா அழைத்துச் செல்கின்றன.
கட்டுரைகளுக்குத் தொடர்புடைய புகைப்படங்களை இணைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.