ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்ட ஊர்ப் பெயராய்வு - அரங்க. இராமலிங்கம்;பக்: 336; ரூ.250; சிவகுரு பதிப்பகம், 7/40, கிழக்குச் செட்டி தெரு, பரங்கி மலை, சென்னை- 600 016.
தொண்டை நாட்டின் பெருமைக்குரிய மண்ணில் வள்ளிமலையில் பிறந்து திருவண்ணாமலையில் முத்தி பெற்றவர் திருப்புகழ் அருளிய அருணகிரி நாதர். அருள்மொழியரசு திருமுருக கிருபானந்த வாரியார், அடைய
பலம் கிராமத்தில் பிறந்த அப்பய தீட்சிதர் போன்ற பல அருளாளர்கள், சமயச்சான்றோர் தோன்றிய மண் வடார்க்காடு. இம் மாவட்டத்தில் 4,059 ஊர்கள் இருந்தன. இவற்றுக்கான பெயர்களைப் பகுத்துக் காணுங்கால் அவை காரண காரியங்களால் உருவாக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது.
ஆர் என்னும் ஆத்தி மரக்காடுகள் நிறைந்திருந்ததால் ஆர்க்காடு என விளங்குகிறது. இந்நூல் ஊர்ப் பெயராய்வை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. நூலாசிரியர் 10 மாதங்கள் விடாமுயற்சியுடன் மேற்கொண்ட ஆய்வின் வெற்றிக்கனியே இந்த நூல்.
ஆற்காடு இரட்டை சகோதரர்களில் ஒருவரான உலகப் புகழ்பெற்ற மருத்துவ மேதை டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார், சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 27 ஆண்டுகள் துணைவேந்தராக கல்விச்சேவை புரிந்தவர். இவரது சகோதரர் சர்.ஏ.இராமசாமி முதலியார் தலைசிறந்த பொருளாதார மேதை. திருப்பத்தூரைச் சேர்ந்த மு.வரதராசனார், செய்யாறு புலவர் கா.கோவிந்தன் போன்ற தமிழறிஞர்களும், சமயச் சான்றோர்களும் பிறந்த வடார்க்காடு மாவட்டத்தின் சிறப்புகளைச் சொல்நயத்துடன் படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும் அரிய வரலாற்று பொக்கிஷத்தை நேர்த்தியுடன் தந்திருக்கிறார் நூலாசிரியர்.