பரிசு: உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான 12 பாடங்கள் - ஈடித் எகர்;தமிழில் - பிஎஸ்வி குமாரசாமி; பக். 226; ரூ. 299; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 7/32 அன்சாரி சாலை, தார்யாகஞ்ச், புது தில்லி -110 002
'தி கிப்ட்' என்ற தலைப்பில், சிறுமியாக இருந்த காலம் ஆஷ்விட்ஸ் வதை முகாமில் யூதர்களான தந்தையையும் தாயையும் பறிகொடுத்த பெண்மணியான ஈடித் ஈவா எகர் எழுதிய நூலின் தமிழாக்கமே இந்தப் "பரிசு'.
உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான 12 பாடங்கள் என்ற தலைப்பில் 12 இயல்களில் 12 விதமான மனச் சிறைகளை விவரித்துத் திறந்துவிடுகிறார் எகர்.
பலிகடா மனநிலை, தவிர்த்தல், சுயபுறக்கணிப்பு, இரகசியங்கள், குற்றவுணர்வு, தீர்க்கப்படாத துக்கம், வளைந்துகொடுக்காமை, மனக்கசப்பு, உறைய வைக்கும் பயம், எடை போடுதல், நம்பிக்கையிழப்பு, மன்னிக்காதிருத்தல் ஆகிய மனச்சிறைகளைப் பற்றியும் அவற்றிலிருந்து விடுபடுதல் பற்றியும் விவரிக்கிறார் எகர்.
தன்னுடைய சொந்த வாழ்வின் அனுபவங்களுடன் தன்னிடம் சிகிச்சை பெற்றவர்கள் வாழ்க்கையின் அனுபவங்களையும் பகிர்ந்து, மனச்சிறையிலிருந்து விடுதலையடைவதற்கான வழிகளைக் கூறுகிறார் ஆசிரியர்.
மனச் சிறைக் கதவுகளைத் திறத்தல் என்ற தலைப்பில் ஈடித் எகர் எழுதியுள்ள நூலின் விரிவான முன்னுரை ஆகச் சிறப்பு. உன் மனதில் இருப்பதை யாராலும் உன்னிடமிருந்து ஒருபோதும் பறிக்க முடியாது என்று தன்னுடைய தாய் கூறிய அறிவுரையை தன் 92-வது வயதில், 2019-இல் நினைவுகூர்கிறார்.
நம்முடைய சொந்த மனம்தான் இருப்பதிலேயே மிக மோசமான சிறை என்கிறார் நூலாசிரியர்.