கொல்லிமலை செல்லி - நிவந்திகாதேவி; பக்.144; ரூ.150, கவி ஓவியா பதிப்பகம், சென்னை-11; 9840912010.
இணையத்தில் வெளியான மர்மங்கள் நிறைந்த திகில் கதை நாவலாக வடிவம் கொண்டு வெளிவந்துள்ளது. கொல்லிமலை என்றாலே அமானுஷ்யங்கள், மர்மங்கள் நிறைந்த - நிகழ்ந்த பகுதி என்பதால் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்வது இயல்பு. ஆனால், அதிக பரிட்சயமில்லாத - எளிதில் நம்பிக்கை கொள்ளாத இன்றைய இளம்தலைமுறை வாசகர்களையும் திகிலூட்டும் புதிய அனுபவத்தை வழங்கி கட்டிப் போட வைப்பதில் நாவலாசிரியை வெற்றி பெற்று விடுகிறார்.
கொல்லிமலையில் அரண்மனை வாரிசுகளை காப்பாற்ற- தீயசக்தியை எதிர்த்து போராடி வென்று முடிக்கும் இளம் பெண்ணின் தீரமிக்க மயிர்க்கூச்செரியும் சாகசங்களே இந்நாவலின் சாரம்.
நாயகி செல்லியின் பாத்திரம் காத்திரமிக்க வடிவமைப்பு. குறி சொல்லும்-பதினாறே வயதான- அழகு ததும்பும் மெல்லிய குரலாள், ஆவேசமாகும் போது பேரிரைச்சல் எழுப்பி எடுக்கும் விஸ்வரூபம் மிரளவைக்கிறது.
செல்லி- அரண்மனை வாரிசு பிரதீப் இடையே மெலிதாக இழையோடும் காதல், அடர்வனத்தில் உருக்கி விடப்பட்ட வெள்ளி அருவி போன்ற அழகியல்.
'உன் மகனின் (வணங்காமுடியான்) தலையை துண்டித்து உன் கரங்களில் வைப்பேன்' என்று அவனது தாய் ருத்ர மாடத்தி முன் எட்டு வயதில் செல்லி எடுத்த சபதம் நிறைவேறுவதன் மூலம் அந்த பாத்திரம் முழுமை பெற்றுவிடுகிறது.
மந்திரங்கள், தந்திரங்கள், அடுத்த நொடி மர்மங்கள், மாயங்கள் என அதிசயிக்கத்தக்க அனுபவத்தை இந்நாவல் நிச்சயம் வழங்கும்.