சங்க இலக்கிய ஆய்வுகள் - முனைவர் சு.அட்சயா; பக்.170; ரூ.170; காவ்யா, சென்னை - 24; )044-23726882.
தொழில், இசை, கருவிகள், அறம், நேரமேலாண்மை, பண்பாடு, உளவியல் என இன்றைய நவீன சமுதாயம் அதிகம் கவனம் செலுத்தும் கூறுகளை சங்க இலக்கியத்திலிருந்து ஆய்வு நோக்கில் இந்த நூல் விவரிக்கிறது.
19-ஆம் நூற்றாண்டில்தான் மேற்கு உலகம் உளவியல் குறித்த ஆய்வை மேற்கொண்டது. ஆனால், அதற்கும் பன்னெடுங்காலம் முன்பே "மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்' என பல்வேறு சங்கப்புலவர்களும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
வேட்டை, வழிபாடு, போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட கொம்பு என்ற இசைக்கருவி தமிழர் வாழ்வில் இருந்து தற்போது வழக்கொழிந்துள்ளது. அதேநேரத்தில் கேரளத்தில் பஞ்சவாத்தியத்தில் ஒன்றாக கொம்பு இசைக்கப்படுவதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வையகமே வறுமையில் வாடினாலும் தனது குடிமக்களுக்கு காலம் கடத்தாமல், எல்லா நேரத்திலும் உணவு படைக்க வேண்டும் என்பதில் அதியமான் உறுதி பூண்டிருந்தான் என்பதை புறநானூற்று பாடல் மூலம் நேரமேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக விவரித்துள்ளார் நூலாசிரியர்.
யாரென்றே அறியாதோரின் பசி, தாகத்துக்கு உணவு, நீரை முக மலர்ச்சியோடு வழங்குவது தமிழரின் கடமையாகவே இருந்துள்ளது என்பதற்கு புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு உள்ளிட்டவை சான்று பகர்கின்றன.
சங்க இலக்கியத்தின் பல்வேறு கூறுகளை எளிமைப்படுத்தி விவரிப்பதோடு மட்டுமல்லாது பழந் தமிழர் பண்பாடு மீது பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது இந்த நூல்.