தென்னகம் தந்த இஸ்லாமிய ஜோதி - ஷாதலி ஹஸ்ரத்; செ. திவான்; பக்.254; ரூ.250; ரெகான் - ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி-627002; )90803 30200.
வரலாற்று நூல்களை ஆய்வு செய்து தொடர்ந்து வெளியிட்டுவரும் நூலாசிரியரின் சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று.
1916-இல் தென்காசியில் பிறந்த ஷாதலி ஹஸ்ரத் இஸ்லாமிய ஆலிமாகவும், பன்னூல் ஆசிரியராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் முக்கிய தலைவராகவும் திகழ்ந்தார். 60 ஆண்டு
காலம் அவர் ஆற்றிய சமுதாயப் பணிகளும், அவரது வாழ்க்கை வரலாறும் இந்த நூலில் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு சரித்திர ஆதாரங்களுடன் அவரது வாழ்க்கை வரலாறு ஏழு தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது.
இளமைக்காலம், கல்வி, தொண்டு, மக்கள் பணி என்று அவரது சேவைகள் வியக்க வைக்கின்றன. ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகியாகவும், ஜமா அத்துல் உலமா பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் சிறந்து விளங்கியதை இந்நூல் எடுத்துரைக்கிறது.
ஆன்மிகவாதியாக வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாய் ஆர்ப்பரித்து மீண்டும் ஆன்மிகவாதியாய் ஷாதலி ஹஸ்ரத் தனது வாழ்க்கையை முடித்ததை இந்நூல் விரிவாக கூறுகிறது.
பன்முகத் தன்மை கொண்டு விளங்கிய அவரது வாழ்க்கை வரலாறு இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்கும். படித்தறிய வேண்டிய நூல் இது.