ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - உருது தொகுப்பாசிரியர் - கோபிசந்த் நாரங்; தமிழில் - எஸ்.கனகராஜ்; பக்.432; ரூ.330; சாகித்திய அகாதெமி, சென்னை - 18; 044 - 2431 1741.
பஞ்சாப் சியால் கோட்டையைச் சேர்ந்த பன்முகக் கலைஞர் ராஜீந்தர் சிங் பேடியின் 18 சிறுகதைகளின் தமிழாக்கத் தொகுப்பே இந்நூல்.
"கம்பளி கோட்டு' என்ற சிறுகதை, ஒரு புதிய கோட்டு வாங்குவதற்கு சிரமப்படும் ஏழை குமாஸ்தாவின் வறுமை குறித்து அவரது மனைவி ஷமி, மகள் புஷ்பா ஆகியோரை மையப்படுத்தி மிக யதார்த்தமாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையையொட்டி ஏற்பட்ட வன்முறையால் இருதரப்பாலும் பல பெண்கள் கடத்திச் செல்லப்பட்டனர். மறுசீரமைப்புக் குழுவினர் மேற்கொண்ட முயற்சியால் இருதரப்பும் பெண்களை திருப்பி அனுப்பியதை "லஜ்வந்தி' என்ற சிறுகதை விவரிக்கிறது. அவ்வாறு திரும்பி வந்து தன் கணவனுடன் மீண்டும் இணைந்த லஜ்வந்தியை அவரது கணவன் சுந்தர்லால் மிகவும் அன்புடன் நடத்துவது நெகிழ்ச்சியாக உள்ளது.
"விற்பனைக்கு ஒரு தந்தை' என்ற கதை "மனிதனை குறுகிய வட்டத்துக்குள் வைத்துவிடும் தவறைச் செய்யக்கூடாது' என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
தனது மகள் ஜீனா, பெயரன் ஷாஹிக், மருமகன் அலிமுகமது ஆகியோரை நீண்ட நாள்களுக்குப் பிறகு காணச் செல்லும் முதியவர் ரகுமானின் மனத்தவிப்பு, ரயில் பயணத்தில் அவர் மோசமாக நடத்தப்படுவது குறித்து விவரிக்கிறது "ரகுமானின் காலணிகள்'.
ஒவ்வொரு கதையின் முடிவும் ஆழ்ந்து சிந்திக்கத்தூண்டுவதோடு மட்டுமல்லாது, மனித நேயத்தையும் வலியுறுத்துகிறது. வரலாற்றுப் பின்னணி இழையோடுவதும், பெண்களின் கதாபாத்திரம் நயத்தகு நாகரிகத்துடன் படைக்கப்பட்டிருப்பதும் இச்சிறுகதைத் தொகுப்பின் சிறப்பு.