அன்னதானம் - இந்தியப் பண்பாட்டின் ஆணிவேர்- இரா.கண்ணன்; பக்.644; ரூ.1000; வெளியீடு: இரா.கண்ணன், 7/1445, வள்ளலார் தெரு, குருமூர்த்தி நகர், பிள்ளையாம்பேட்டை, அம்மாசத்திரம் (அஞ்), தஞ்சாவூர் மாவட்டம்-612 103.
"தானத்தில் சிறந்தது அன்னதானம்' என்பது முதுமொழி. அன்னமே உலகில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. உயிர்களின் பலமும் ஒளியும் எப்போதும் அன்னத்தாலேயே வளர்ச்சி பெறுகின்றன. அன்னம் தண்ணீரால் உண்டாகிறது. இத்தண்ணீரால் உண்டான அன்னம் இல்லையென்றால் உலகில் எதுவுமே இல்லை. அதனால்தான் இவ்விரண்டின் பெருமைகளையும் பீஷ்மர் (மகாபாரதத்தில்) எடுத்துரைக்கிறார்.
"பசியுடன் இருப்பவர்க்கு அன்னம் பாலித்தால் இறைவன் இருமடங்கு அருளை வழங்குகின்றான்' என்கிறது நமது வேதம். "பசிப்பிணியால் வாடுகின்ற அனைவரும் அன்னதானம் ஏற்பதற்குரிய தகுதி உடையவராவர்' என்றும், "அன்னதானத்தை முழு நம்பிக்கையோடு செய்தால் நம் ஆத்ம பலம் பெருகும்' என்கிறது சாஸ்திரம். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நால்வகைப் புருஷார்த்தங்களைத் தரவல்லது அன்னதானம்.
உமையம்மை இப்பூவுலகிற்கு வந்து காஞ்சியில் 32 அறங்களை வளர்த்ததும், அதனால் "அறம் வளர்ந்த நாயகி' எனத் திருப்பெயர் பெற்றதும், அத்தகைய அறங்களுள் முதன்மையானது அன்னதானம் என்பதையும் காஞ்சிபுராணம் விரித்துரைக்கிறது.
பவிஷ்ய புராணத்தில், பீஷ்மரின் மகத்தான உபதேசத்தின் சாரத்தை ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரருக்கு உபதேசிக்கும்போது, அன்னதானத்தின் மகிமையை எடுத்துரைக்கிறார்.
வேதங்கள், சாஸ்திரங்கள், இராமாயணம், மகாபாரதம், தமிழ் இதிகாசங்கள், காப்பியங்கள், புராணங்கள், சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், மனுதர்மம், உபநிடதங்கள், வடமொழி இலக்கியங்களில், சைவ-வைணவ அன்னதான அறக்கட்டளைகள், திருக்கோயில்கள், கல்வெட்டுகள், ஆதீனங்கள், அன்னதானம் சிறப்பாகச் செய்த மகான்கள் - என அன்னதானம் குறித்து அனைத்து தகவல்களையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.