தமிழக வரலாற்று நூற்களஞ்சியம் - முனைவர் அ.பிச்சை; பக்.464; ரூ.460; கபிலன் பதிப்பகம், மதுரை-625 021.
'வரலாறு என்பது ஓர் இனத்தின் வாழ்வுக்கும் வீழ்வுக்கும் சான்று கூறும் எழுத்துச் சின்னம்' என்பதை, 'தமிழ்நாட்டு வரலாறு' என்ற நூலிலிருந்து தரும் நூலாசிரியர் வரலாற்றின் பயன், வரலாற்று முறையியல், தொல்லியலும் வரலாறும் ஆகியவை பற்றி முன்னோர் மொழிந்த மொழியைப் பதிவிட்டிருக்கிறார்.
'தொன்மைக்கால வரலாறு' என்ற பகுதியில் மொழி, சிந்து சமவெளி நாகரிகம், அங்கு குடியேறிய திராவிடர்கள், ஆரியர்கள், மூத்த குடிகள் பற்றிய விவரம், மதுரை கீழடி, குமரிக்கண்டமும் லெமூரியாவும் என விரிவானதொரு விளக்கம் தரப்பட்டுள்ளது.
குமரி நில நீட்சி (2002), தமிழர் நாடும் தனிப் பண்பாடும் (2005), கடலடியில் தமிழ் நாகரிகம் (2010), குமரிக்கண்டமா? சுமேரியாவா (2012), தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு(2013), பெருங்கற்காலம் பண்பாடு (2013), தமிழர் தோற்றமும் பரவலும் (2014), தமிழரின் தொன்மை (2016) முதலிய நூல்களிலிருந்து தொன்மைக் கால வரலாறு பேசப்படுகிறது.
இதேபோல பண்டைத் தமிழகம், மூவேந்தர்கள், நாயக்கர்கள் வரலாறு, பல்லவர்கள் வரலாறு, ஆங்கிலேயர் கால வரலாறு, விடுதலைப் போரில் மதுரையின் பங்கு, களப்பிரரும் பல்லவரும், மாவட்டத் தொல்லியல் வரலாறு, கோயில் வரலாறு, இந்திய வரலாறு, இலங்கை வரலாறு, சாதி, இன வரலாறு, வட்டார வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, காசு, சாசனம் போன்றவை பற்றிய குறிப்புகள், ஊர்ப் பெயராய்வு என தமிழக வரலாறு குறித்த விவரங்கள் அனைத்தும் தமிழறிஞர்களின் பல்வேறு ஆய்வு நூல்களிலிருந்து ஆங்காங்கே தரப்பட்டுள்ளது.
'மேலும் படிக்க...' என்று தமிழக வரலாறு குறித்த சில நூல்களையும் பரிந்துரைத்து, வெளிவந்த ஆண்டோடு பட்டியலிட்டுள்ளது மிகச்சிறப்பு. சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களையும், அதன் ஆசிரியர்களையும், அது வெளியான ஆண்டையும் இந்த நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.