கம்பன் படைத்த காண்டங்கள் - 13 அறிஞர்களின் சொல்லோவியங்கள்; பக்.312; ரூ.250; பாரதி புக் ஹவுஸ், வேலூர்-4; 99424 41751.
கம்ப ராமாயணத்தில் உள்ள ஆறு காண்டங்கள் குறித்து 13 தமிழறிஞர்களின் விரிவான கருத்துகளை இந்த நூல் பதிவு செய்துள்ளது.
ராமாயணம் என்ற காவியம் பாரதத்துக்கு மட்டுமே உரித்தானது அல்ல. நாடு, மொழி, இனம் கடந்து அனைத்து வருங்காலத் தலைமுறையினருக்கும் வாய்மை, ஒழுக்கம், நீதி
உள்ளிட்ட அறநெறிகளை வலியுறுத்த அதன் தேவை இருக்கிறது.
கம்ப ராமாயணம் இயற்றப்பட்டு பல நூறாண்டுகள் கடந்தும் இன்னும் அதன் கவிதைகளில் ஈர்ப்பு குறையவில்லை. எத்தனையோ ஆய்வுகள் வந்துள்ளபோதும் இன்னும் ஏராளமான புதிய செய்திகள் கம்ப ராமாயணத்தில் இருக்கின்றன.
எத்தனையோ கதாபாத்திரங்கள் இருப்பினும் "அனுமன்' பாத்திரத்தில்தான் கம்பன் தன்னையும் தனது மாட்சிமையையும் புலப்படுத்துகிறார் என தக்க ஆதாரத்துடன் நிறுவுகிறார் முனைவர் உலக.தேன்மொழி.
ராமாயணத்தில் முக்கிய பாத்திரமாக மட்டுமல்லாது மகாபாரதத்திலும், குறிப்பாக குருஷேத்திர போரின்போது அர்ஜுனனுக்கு மானசீகமாக அனுமன் எப்படி பலம் சேர்த்தான் என்பதை முனைவர் நா.குமாரி சுவைபட விளக்கியுள்ளார்.
தன் மனைவியை மீட்க, இன்னொருவன் மனைவியைத் தன் வயப்படுத்திய வாலியின் உதவியை நாடக்கூடாது என்பதாலேயே இராமனை சுக்ரீவனிடம் கம்பர் அனுப்பினார் என முதுமுனைவர் இரா.சங்கர் உரைத்திருப்பது வாலி வதம் குறித்து மற்றுமொரு கோணத்தை முன்வைக்கிறது.
அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்ற கம்ப ராமாயணத்தின் நோக்கத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில் ஒவ்வொரு கட்டுரையும் பல புதிய கோணங்களை உள்ளடக்கி விளக்குகிறது. கம்பன் ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்தநூல்.