நற்றமிழ் ஓங்கு நடைப்பயணம் - பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்; பக்.912; ரூ.1,200; கவியரசன் பதிப்பகம், சென்னை-92; 72997 67525.
மொழியைக் காக்க காலம்தோறும் பலர் பல்வேறு வழிகளில் 'தாய்தமிழைக் காக்க' போராடி இருக்கிறார்கள். 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்', 'தமிழர்க்குத் தேவை தாய்மொழிக் கல்வியே' என்ற கொள்கை கொண்டவர் நூலாசிரியர். இதற்காக, கன்னியாகுமரியில் 12.2.1993-இல் தொடங்கி, சென்னையில் 29.3.1993 முடிய 47 நாள்கள் 'நற்றமிழ் ஓங்கு நடைப்பயணம்' என்ற பெயரில் பயணம் மேற்கொண்டார்.
'சாதியை, மதத்தை, கட்சியை மறந்து தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்' என்கிறார் அவர். தெலுங்கர், மராட்டியர், அரபு, உருது பேசுவோர், ஆங்கிலேயர் என்போர் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு வந்தாலும், தமிழர்களாக மாறினாலும், வெளியில் தமிழ் பேசினாலும் வீட்டில் தங்களது தாய்மொழியைத்தான் பேசுகின்றனர். தமிழன் நிலை என்ன?' என்று கேள்வி எழுப்புகிறார்.
'தமிழ்நாட்டில் தமிழே முதன்மை மொழி. தமிழின் உரிமையை மற்ற மொழிகளுக்கு விட்டுக் கொடுக்காதே' என்று கூறுவதுடன் 'ஆங்கில வழியில் படித்தால்தான் வெளிநாடுகளுக்குப் பணிக்குச் செல்ல முடியும் என்பது உண்மையல்ல. ஆங்கிலத்தை ஒரு பாடமாக கற்றுக் கொண்டு, தாய்மொழி வாயிலாகவே அறிவியல் துறை சார்ந்த, கணினி வளர்ச்சிக்கேற்ற அனைத்துத் துறை பாடங்களைப் பயிலலாம்' என்று பயணமெங்கும் உரையாற்றியிருக்கிறார்.
1993-இல் நடைப்பயணம் நடைபெற்றிருந்தாலும் 2022-ஆம் ஆண்டில்தான் நூலாக உருப்பெற்றுள்ளது. நூலின் முகப்பில் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், தமிழறிஞர்கள் வாழ்த்துகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பயணத்தில் தனது அனுபவங்கள், வரவேற்ற தமிழறிஞர்கள், அமைப்புகள், நடைபெற்ற கூட்டங்கள் எனஅனைத்தையும் பதிவு செய்துள்ளதால் படிக்க படிக்க ஆவலைத் தூண்டுகிறது.
தமிழ் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய அருமையான நூல் இது.