கடவுளின் தேசத்தில் - ராம் தங்கம்; பக்.152; ரூ.188; வானவில் புத்தகாலயம், சென்னை- 17; ✆ 044-2986 0070.
நாகர்கோவில் ஜங்ஷனிலிருந்து திருவனந்தபுரம் வழியே புதுச்சேரி யூனியனை சேர்ந்த மாஹேவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நூலாசிரியரின் பயண அனுபவத்தை இந்த நூல் பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக மாஹியிலிருந்து தலச்சேரி, கோட்டயம், அடிமாலி, மூணார், மறையூர், தோட்டமலை, கீழ்கோதையாறு, வைக்கம், வாகமன், எர்ணாகுளம் வரையிலான பயண விவரங்களும் சுவாரஸ்யம்.
சுற்றுப் பயணத்தில் இடம்பெற்ற ஊர்களின் வரலாற்றுப் பின்னணி, கலாசாரம், புவியியல், மக்களின் வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
சங்க காலத்துப் பெயர்களும், சடங்குகளும் இன்றளவும் வழக்கில் இருப்பதன் வரலாறு, கேரளத்துக்கும் கால்பந்தாட்டத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு, பேரிடரைச் சந்திக்கும் போதெல்லாம் கேரளத்துக்கு அமீரகம் உதவுவதன் பின்னணி உள்ளிட்டவை நூலாசிரியரின் மெனக்கெடல்களையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகின்றன.
முதல்முதலில் காலனிக்கோட்டை அமைந்த நகரம், எழுத்துகளின் நகரம், தமிழர்களுக்கு செவாலியர் பட்டம் கொடுப்பதன் மரபு, மூக்கன் துரை என்பவர் யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் ஆச்சர்யமூட்டுகின்றன.
அணைகள், துறைமுகங்கள், மலைப் பாதைகள், அருவிகள், தேயிலைத் தோட்டம், ரயில் பாதைகள், எழுத்தாளர்கள், பழங்குடிகளின் சம்பிரதாயங்கள் என இந்நூல் பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. கள ஆய்வு, தொழில்முறை பயணம், உல்லாசப் பயணம் மேற்கொள்வோருக்கு இந்நூல் குறிப்பிடத்தக்க வழிகாட்டி.