விடைகள் ஆயிரம்
விடைகள் ஆயிரம் - கி.வா.ஜகந்நாதன்; பக்.232; ரூ.230; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; ✆ 044-24331510.
கலைமகள் இதழில் வெளிவந்த கி.வா.ஜ.வின் கேள்வி- பதில்கள் தொகுப்பே இந்த நூல். அவரது பதில்கள் ஆச்சரியப்படுத்துபவையாகவும், சிந்தனைக்குரியவையாகவும் இருக்கின்றன.
இலக்கிய வகையில் ஒüவையார், "இல்லானை இல்லாளும் வேண்டாள்' என்று கூறியவர், "ஈன்றெடுத்த தாய் வேண்டாள் என்பது சரியா?' என கேட்டதற்கு, வறுமையின் கொடுமையை கூறியதாக குறிப்பிடும் கி.வா.ஜ., "பணக்காரப் பிள்ளையிடமிருந்து கொண்டு ஏழைப்பிள்ளைகளைக் கவனிக்காத தாய்மார்கள் உலகில் இல்லையா?' என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்.
இரட்டைப் புலவர்கள், அரியலூர் பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றுக்கும், இலக்கணம் உள்பட அனைத்துத் துறை சார்ந்த கேள்விகளுக்கும் அவரது பதில் சிந்திக்க வைப்பனவாக அமைந்துள்ளன. "தீபாவளி' எனும் சொல் "விளக்குகளின் வரிசை' என்ற பொருளில் வந்ததாகக் கூறும் நூலாசிரியர், காலப்போக்கில் வெடிசுட்டு வாணம் விடும் பழக்கமாகிவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.
மனிதர் என்பது காரணப் பெயரா என்பதற்கு "மநுஜ' என்ற வடசொல்லில் இருந்து வந்ததாகக் குறிப்பிடும் நூலாசிரியர், காசியப்ப முனிவரின் மனைவி மநுவிடம் பிறந்தமையால் அப்பெயர் வந்ததாகக்
குறிப்பிடுகிறார். மேதாவி என்பது வட சொல்லாகக் கூறுவதுடன், அதற்கான தமிழ்ச் சொல்லாக மேதை இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
"பட்டினம்' என்பது கடற்கரையில் அமைந்த ஊரைக் குறிப்பதாகவும், " பட்டணம்' என்பது பெரிய ஊரைக் குறிப்பதாகவும் கூறும் நூலாசிரியர், "பத்தனம்' என்ற வடசொல்லில் இருந்து வந்ததாகவும் சுட்டிக்காட்டுகிறார். இந்த நூல் சிந்தனையின் சுரங்கம்தான்.