இலிங்காயத்துகள் இனவரைவியல் ஆய்வு
இலிங்காயத்துகள் இனவரைவியல் ஆய்வு - பெ.கோவிந்தசாமி; பக்.122; ரூ.140; காவ்யா, சென்னை-24; ✆ 044-23726882.
சமவெளிப் பகுதியை ஆட்சி செய்த பல்வேறு சமூகங்கள் ஆவணப்படுத்தப்பட்ட நிலையில் மலைவாழ் பழங்குடியினரின் வாழ்வியல் பதிவு செய்யப்படாமல் இருந்து வருகிறது. இந்தச் சூழலில், ஈரோடு மாவட்டத்தின் பர்கூர் மலையில் வாழும் லிங்காயத்து பழங்குடி மக்களின் வாழ்வியல், கலாசாரம் குறித்த விரிவான ஆய்வாக இந்நூல் விளங்குகிறது.
எல்லைப் பகுதியில் வாழும் லிங்காயத்துகள் கன்னடத்தைப் பூர்விகமாகக் கொண்டுள்ளனர். அதனால் பண்டமாற்று உள்ளிட்ட பல தேவைகளுக்குத் தமிழைப் பயன்படுத்தினாலும், பெரும்பாலும் கன்னடத்தில் பேசுகின்றனர்.
கர்நாடகத்தில் 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பசவண்ணர் லிங்காயத்து மதப் பிரிவின் பெருந்தலைவர்.
லிங்காயத்துகள் உழைப்பாளிகளாக வாழ்ந்து வருகின்றனர். வீர சைவ சமயத்தைப் பின்பற்றும் இவர்களது வழிபாட்டு மரபுகளும், உணவு முறையும், சடங்குகளும் தனித்தன்மை வாய்ந்தவை. வேறுபாடின்றி அனைவரும் லிங்கத்தை அணிவதன் மூலம் மற்ற சமூகங்களில் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றனர். ஒரு சமூகத்தின் பிறப்பு, திருமணம், உணவு, உடை, சடங்கு, நம்பிக்கை, இறப்பு உள்ளிட்ட செய்திகளை இந்நூல் மிக நுட்பமாக விளக்குகிறது. லிங்காயத்துகளின் வாழ்வியலைப் புரிந்து கொள்ள உதவும் 'தோரணகிரி கல்பம்' கட்டுரை நூலுக்கு மேலும் வலு சேர்க்கிறது.
சமூகவியல், மானுடவியல், நாட்டுப்புறவியல் துறை சார்ந்த பல்வேறு ஆய்வுத்தடங்களில் விரிவான ஆய்வுக்கான வாய்ப்புகளை நல்குகிறது.