மகாபாரதத்தில் தெய்வீக மாதர்கள் - தினகர் ஜோஷி (தமிழில்- ராஜலட்சுமி சீனிவாசன்); பக். 208; ரூ.300; வானவில் புத்தகாலயம், சென்னை-17; ✆ 72000 50073.
மகாபாரதத்தில் பெண் காதாபாத்திரங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொன்றும் கதையின் நகர்வை திருப்புமுனையாகக் கொண்டு செல்பவை. அவற்றின் சிறப்புகளை சுவாரசியமான நிகழ்வுகளோடு வெளிப்படுத்தும் அருமையான தொகுப்பு இந்நூல்.
மொழிபெயர்ப்பு நூலாக வெளிப்படுத்தாமல், பெண் கதாபாத்திரங்களை அவற்றுக்கே உரிய சிறப்புகளுடன் அழகு நடையில் விறுவிறுப்புடன் முன்வைத்துள்ளார் ஆசிரியர்.
பீஷ்மர், கர்ணன் கதாபாத்திரங்களில் கங்கை, குந்திதேவியின் தொடர்பு அதன் பின்னணி ருசிகரமாகத் தரப்பட்டுள்ளது. பாரதத்தின் முதல் முக்கிய பெண் கதாபாத்திரமான சத்தியவதியே குருவம்சத்தின் முதல் அத்தியாயமும்கூட. இவரை பற்றிய தகவல்களும் ரசிக்கத்தக்க வகையிலுள்ளது.
பீஷ்மரின் தாய் கங்கை என்பதால் கங்கைக்கு எப்போதும் சிறப்பு அதிகம். ஆனால், பாரதத்தின் கதையோட்டத்தில் கங்கையின் பாத்திரம் சில பக்கங்களிலேயே முடிந்து விடுகிறது. இந்த நூலில் கங்கையின் முழுமையான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேபோல் குந்திதேவி, காந்தாரி, திரௌபதி, சுபத்திரை, ஹிடிம்பா, உலூபி, சித்ராங்கதா ஆகிய கதாபாத்திரங்களும் ருசிகரமான தகவல்களுடன் தரப்பட்டுள்ளன. குறிப்பாக, பீமன் மீது ஹிடிம்பா கொண்ட காதல், வாழ்க்கை, இவர்களுக்குப் பிறந்த கடோத்கஜன் ஆகிய கதாபாத்திரங்களும் படிக்கப் படிக்க விறுவிறுப்பைத் தருகிறது. மொத்தத்தில் மகாபாரதத்தின் மற்றொரு பகுதியை விளக்கும் அருமையான நூல் இது.