கடவுள் உண்டு கடவுள் ஒன்று - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்; பக். 132; ரூ.130; இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை-12; ✆ 86680 57596.
நாத்திகர்கள் மனம் புண்படாமல், அவர்களுக்கு கடவுள் உண்டு என்பதை விரிவான ஆதாரங்களுடன் எடுத்துரைத்திருக்கிறார் நூலாசிரியர். நாட்டில் நாத்திகத்தை முதல் முதலில் பரப்பிய
சமணமும், பௌத்தமும்கூட கடவுளை ஏற்றுக்கொண்டுவிட்டன என்பதை சுட்டிக் காட்டுகிறார் அவர். மூன்று பாகங்களாக, எளிய தமிழில் எண்ணற்ற தகவல்களை நூலாசிரியர் தொகுத்தளித்துள்ளார்.
இறைமறுப்பு கொள்கை கடந்து வந்த பாதை, நாத்திகம், இறைநம்பிக்கையாளர்களை நோக்கி விடுக்கப்படும் கேள்விகள், பிரபஞ்சம் தோன்றிய விதம், தானாகத் தோன்றியது துல்லியமாக இயங்குமா, கடவுளைப் படைத்தது யார், விஞ்ஞானமும் கடவுளும், கடவுளும் ஒழுக்க மாண்புகளும் ஆகிய ஏழு கட்டுரைகள் 'இறைவன் உண்டு' என்ற என்ற முதல் பாகத்தில் அடங்கியுள்ளன.
'ஏகனா, அநேகனா', 'எது சரியான கோட்பாடு', 'இறைகோட்பாடு வழங்கும் நன்மைகள்' என்ற மூன்று கட்டுரைகள் 'இறைவன் ஒன்று' என்று எடுத்துரைக்கின்றன. முத்தாய்ப்பாக,
மூன்றாவது பாகத்தில், 'ஐயமும் தெளிவும்' என்ற கட்டுரையில் கடவுள் குறித்து கடவுள் தேவையா? அவர் பூமிக்கு ஏன் வருவதில்லை, துன்பங்களுக்கும் நோய்களுக்கும் காரணம் என்ன?,
திருக்குர்ஆன் வெளிப்படுத்தும் உண்மைகள், மூட நம்பிக்கைகள் குறித்த விளக்கம் போன்றவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. நூலை படிக்கத் தொடங்கிவிட்டால், முடித்துவிட்டே வைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் வகையில், சிறந்த முறையில் எழுதியுள்ளார் நூலாசிரியர்.
நாத்திகர்கள் மட்டுமின்றி,ஆத்திகர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என அனைவரும் படித்தறிய வேண்டிய நூல் இது.